வெள்ளி, 14 மார்ச், 2014

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஈவேரா பாடுபட்டாரா???

திராவிட இயக்கத்தவர்கள் நீதிக்கட்சியைப் பற்றி எழுதும்பொழுது ‘‘ நீதிக்கட்சி பதினாறு ஆண்டுகள் இடைவிடாது ஆட்சி நடத்தாமல் இருந்திருந்தால் அந்த ஆட்சிக்கு 1925 முதல் தம்
முழு ஒத்துழைப்பைப் பெரியார் தராமல் இருந்திருந்தால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் தலை எடுத்திருக்கவே முடியாது. வளர்ச்சி அடைந்திருக்கவே மாட்டார்கள்’’ (அடிக்குறிப்பு 1)
என்றும் -
‘‘அந்த கால அளவில் தாழ்த்தப்பட்டவர்களுக்காக போராடத் தாழ்த்தப்பட்ட இனத் தலைவர்கள் பலராக இல்லை. தாழ்த்தப்பட்டவருள் அரசியல் அறிவு வாய்க்கப்பெற்றிருந்த ஓரிருவர்
நீதிக்கட்சியில் சேர்ந்திருந்தனர். தாழ்த்தப்பட்ட இனத் தலைவர்கள் நீதிக்கட்சி கொடியின் கீழ் அணிவகுத்து நின்றனர். நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைக்காக
போராடிற்று….நீதிக்கட்சி உயர்ந்த சாதி இந்துக்களின் பெண்களை பறையர்களுக்குத் திருமணம் செய்து வைக்க விரும்புவதாக இடைவிடாது பார்ப்பனர் பிரசாரம் செய்தனர்.
நீதிக்கட்சிக்கு ஆதரவு அளித்து வந்த உயர்சாதி இந்துக்களிடையே இந்தப் பொறாமைப் பிரசாரம் ஒரு பயன்தராத நிலையை உருவாக்க முயன்றது. எனினும்
பொருட்படுத்தாது நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்தும் பணியைத் தொடர்ந்து செய்து வந்தது. (அடிக்குறிப்பு 2) தாழ்த்தப்பட்டவர்கள் உரிமைகள் பாதுகாக்கப்பட
வேண்டுமென்றும்,போராடுவதற்காகவும் நீதிக்கட்சி உருவாகிற்று.’’ (அடிக்குறிப்பு 3)
தாழ்த்தப்பட்டவர்கள் பிற சமுதாயத்தினர்க்கு ஒப்ப எல்லா உரிமைகளையும் பெற்று வாழ வேண்டும் என்ற குறிக்கோளுடன் பிறந்தது நீதிக்கட்சி. நீதிக்கட்சி தோன்றிய காலத்தில் தாழ்த்தப்பட்டவர்
பட்ட துன்பங்களையும் அவர்கள் அடைந்த இன்னல்களையும் அவர்கள் பெற்ற அவமானங்களையும் எழுதுவதென்றால் அவை இந்நாட்டின் ஒரு அவல வரலாறாகவே அமைந்துவிடும். அவர்கள்
குரலற்றவர்களாகவும் செயலற்றவர்களாகவும் அப்போது இருந்தார்கள். அவர்களுக்காகப் பேச செயல்பட ஒரே இயக்கமாக நீதிக்கட்சி தென்னகத்தில் உருவாயிற்று.
(அடிக்குறிப்பு 4)
- என்றும் குறிப்பிடுகிறார்கள்.
தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேற்றம் குறித்து எழுதவும் பேசவும் பொழுதெல்லாம் ‘நீதிக்கட்சி’ என்ற அரசை குறித்துத் திராவிடக் கழகத்தவர் முதல் பல எழுத்தாளர்கள் வரை பெருமைப்
பொங்கக் கூறுகிறார்கள்.
இவர்கள் இவ்வாறு எழுதுவதின் நோக்கமென்ன?
தாழ்த்தப்பட்டோர் சிந்தனையற்றவர்களாவும் செயலற்றவர்களாகவும் இருந்தார்கள் என்றும், தாழ்த்தப்பட்டவரிடையே அரசியல் அனுபவமுள்ளவர்களே ஒரு சிலரே என்றும்,
தாழ்த்தப்பட்டவர்களுக்கான உரிமையையும் முன்னேற்றத்தையும் பார்ப்பனரல்லாத உயர்சாதி இந்துக்களால் வழிநடத்தப்பட்ட நீதிக்கட்சி மற்றும் ஈ.வே.ராமசாமி நாயக்கராலேயே செய்ய
முடிந்தது என்று தாழ்த்தப்பட்டோர்கள் நம்ப வேண்டும் என்பதே அவர்களுடைய நோக்கமாகும்.
‘‘ பார்ப்பனரல்லாதாரில் உயர்ந்த சாதியினர் தாழ்ந்த சாதியினர் எனப் பாராது அனைவர்க்கும் இடம் தரும் ‘திராவிடர் ஹோம்’ பார்ப்பனரல்லாதாரில் உயர்ந்த சாதியராகிய சி. நடேச
முதலியாரால் உருவாக்கப்பட்டது என்பதும் அறிகிறோம்.
உரிமைகள் தமக்கும் உண்டு என்பது கூட அறியாராய்த் தமது உரிமைகள் எவை என்பதை அறியாராய் வாழ்ந்து கொண்டிருந்த தாழ்த்தப்பட்டோர் உரிமைகளுக்காக இலண்டன் மாநகரத்தில்
திராவிடச் சங்கம் சார்பில் சான்றுரை பகர்ந்தவர் பார்ப்பனரல்லாதாரில் உயர்ந்த சாதியராகிய சர். ஏ. இராமசாமி முதலியார் என்பதையும் அறிகிறோம்.(அடிக்குறிப்பு 5)”
இப்படிக் கூறுவதன் நோக்கமென்ன?
பார்ப்பனரல்லாதாரில் உயர்ந்த சாதியைச் சார்ந்தவர்கள் தான் தாழ்த்தப்பட்டவர்களுக்காக போராடியவர்கள் என்பதை தெரியப்படுத்துவதற்குத்தான்.
ஆனால் உண்மை என்ன?
உண்மையிலேயே நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பாடுபடத்தான் தோன்றியதா?
நீதிக்கட்சி இல்லாத போது சிந்தனையற்றும் செயலற்றும், உரிமைகள் தமக்கும் உண்டு என்பது கூட அறியாராய்த் தமது உரிமைகள் எவை என்பதை அறியாராய்
வாழ்ந்து கொண்டிருந்தனரா தாழ்த்தப்பட்டவர்கள்?
தாழ்த்தப்பட்டோரிடையே அரசியல் அனுபவம் உள்ளவர்கள் இல்லாது இருந்தார்களா?
நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்தும் பணியைத் தொடர்ந்து செய்து வந்ததா?
நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களுக்கு செய்த சாதனைதான் என்ன?
இந்தக் கேள்விகள் மிக மிக முக்கியமானவைகள். இந்தக் கேள்விகள் ஒவ்வொன்றையும் மிக விரிவாகவே நாம் ஆராய்வோம்.
விருப்பு வெறுப்பு இல்லாமல் ஓர் ஆராய்ச்சி முறையில் நாம் நீதிக்கட்சிப் பற்றியும், தாழ்த்தப்பட்டவர்கள் நிலைமை பற்றியும் இவர்கள் கூறியிருக்கின்ற
கருத்துக்களை ஆராய்ச்சி செய்து பார்த்தோமானால் நிச்சயமாகவே இவர்கள் கூறியிருக்கின்ற கருத்துகள் அப்பட்டமான வரலாற்றுப் பொய்கள் என்பது புலப்படும்.
தாழ்த்தப்பட்டவர்களின் அரசியல்
தாழ்த்தப்பட்டவர்கள் எப்பொழுதுமே தங்கள் உரிமைகளுக்காக போராட்டங்களில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர் என்பதைத்தான் சரித்திரம்
நமக்கு சான்று பகர்கின்றது.
1779 – இல் சென்னை நகரத்தின் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கருகில் இருந்த தங்களின் குடிசைகளை அப்புறப்படுத்துவதை எதிர்த்துக்
கிழக்கிந்தியக் கம்பெனியாருக்குத் தாழ்த்தப்பட்ட மக்கள் ஒரு விண்ணப்பம் அளித்தனர்.
1810 – இல் அந்தக் காலத்தில் ‘பறச்சேரி’ என வழங்கிய பகுதியிலிருந்த தங்களின் குடிசைகளுக்கு விதிக்கப்பட்ட உரிமைத்
துறப்பு வரிவிதிப்பை எதிர்த்து செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்த பிரிட்டிஷ் நிர்வாகத்தாருக்கு மனு அளித்தனர். பிற்காலத்தில் இந்த இடம்
‘பிளாக் டவுன்’ என்று ஆனது.
1870 – இல் ‘ ஆதிதிராவிட மகாஜன சபை’ என்ற பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்திக் கொண்டனர்.
அது பதிவு செய்யப்படாதது. பின்பு 1892ல் அது பதிவு செய்யப்பட்டது.
1917 – இல் இந்தியாவுக்கு வந்த மாண்டேகு – செம்ஸ்போர்டு தூது குழுவினரிடம் ஒரு மகஜரைக் கொடுத்துத் தங்களை ‘ஆதிதிராவிடர்’ என்று குறிப்பிட வேண்டும் என்று கேட்டுக்
கொண்டனர். இந்த மகாஜன சபைவின் செயலாளர் எம்.சி.ராஜா, 1922 – இல் அப்போதைய ஆளுநர் வெலிங்டன் பிரபுவால் சட்டமன்ற உறுப்பினராக நியமனம்
பெற்றபோது ‘ஆதிதிராவிடர்’ என்ற பெயரைச் சட்டபூர்வமாக ஏற்கச் செய்தார். இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலிருந்த தீண்டாதோர் ‘ஆதிதிராவிடர்’ எனப்படலாயினர். பின்னர்
ஆந்திரம், கர்நாடகம் ஆகிய பகுதிகளில் இருந்த தீண்டாதார் முறையே ‘ஆதிஆந்திரர்’, ‘ஆதி கர்நாடகர்’ எனப்பட்டனர்.
1891 – இல் ‘திராவிட மகாஜன சபா’ என்ற பெயரில் ஒரு சங்கத்தை ஏற்படுத்தினர். அதன் சார்பில் 1-12-1891 – இல் உதக மண்டலத்தில் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில்
செட்யூல்டு வகுப்பாருக்கு அரசியல் உரிமைகள், அரசு பணிகளில் வாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம், கல்விச் சலுகைகள், சிவில் உரிமைகள் ஆகியவற்றைப் பெறுவது பற்றிப்
பேசப்பட்டது. பின்வரும் பத்து கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்துவதற்காக ‘பறையன்’ என்று அழைப்பதையும், அந்த வார்த்தையைப் பயன்படுத்துவதையும் தடுப்பதற்குரிய வகையில் கடுமையான
தண்டனை விதிப்பதற்கு வகை செய்யும் சட்டம் இயற்ற வேண்டும்.
2. தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றம் காண்பதற்குக் கல்வி மிக அவசியமாகும்.எனவே, கிராமங்கள் தோறும் தாழ்த்தப்பட்டோரை ஆசிரியர்களாகக் கொண்ட தனியான பள்ளிகளைத்
தாழ்த்தப்பட்டோர் வாழும் கிராமங்கள் தோறும் தொடங்க வேண்டும்.
3. மெட்ரிகுலேஷன் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களில் மூவரைத் தேர்ந்தெடுத்து பட்டப்படிப்புப் படிப்பதற்காக உதவித் தொகை வழங்க வேண்டும்.
4. மெட்ரிகுலேஷன் தேர்வில் வெற்றி பெறுவோர் அனைவருக்கும் அரசு அலுவலகங்களில் வேலை கொடுத்து உதவ வேண்டும்.
5. கல்விக்கும், நன்னடத்தைக்கும் தக்கவாறு அரசாங்க அலுவலகங்களில் நியமனம் அளிப்பதற்கு எவ்வகையான தடையும் இருக்கக் கூடாது.
6. மாவட்டங்கள் தோறும் நகராட்சிகளிலும், கிராமப் பஞ்சாயத்துகளிலும் தாழ்த்தப்பட்ட மக்களின் குறைகளை எடுத்துச் சொல்வதற்காகத் தாழ்த்தப்பட்ட மக்கள் சார்பில் பிரதிநிதிகள்
நியமிக்கப்பட வேண்டும். இவ்வாறு நியமிக்கப்படுவோர் வரி செலுத்துவோராக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தாமல் கல்வித் தகுதி, நன்னடத்தை ஆகியவற்றைக் கருதி நியமிக்கப்பட வேண்டும்.
நகராட்சி மற்றும் பஞ்சாயத்து நிர்வாகத்தில் தாழ்த்தப்பட்டோர் சார்பில் நியமனம் பெற்ற உறுப்பினர் மற்ற உறுப்பினர்களுக்கு சமமாகவும் மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டும்.
7. சிறைச்சாலை விதிகள் 464ன் படி சிறைச்சாலைகளில் ‘பறையர்கள்’ இழிந்த வேலைகளைச் செய்ய வேண்டும் என்று விதித்திருப்பதை நீக்க வேண்டும்.
8. தாழ்த்தப்பட்ட மக்கள் பொதுக்கிணறுகள், குளங்கள் ஆகியவற்றில் எவ்வித தடையும் இன்றித் தண்ணீர் எடுத்து அருந்துவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.
9. நீதிமன்றங்கள், அரசாங்க அலுவலகங்கள் ஆகிய இடங்களில் மற்ற இந்துக்களோடு தாழ்த்தப்பட்ட மக்கள் செல்லவும், சமமாக உட்காரவும் தற்போதுள்ள கட்டுப்பாடுகளை ஒழிக்க வேண்டும்.
10. நன்னடத்தையுள்ள தாழ்த்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டோர் பெரும்பான்மையினராக உள்ள கிராமங்களில் கிராம ‘முன்சீப்’ பதவியிலும், மணியக்காரர் பதவியிலும் அமர்த்தப்பட வேண்டும்.
மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர்கள் கிராமங்களுக்குப் பார்வையிடப் போகும் போது தாழ்த்தப்பட்ட மக்களை நேரடியாகச் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு நியாயம் வழங்க வேண்டும்.
இந்தத் தீர்மானங்களையும் கோரிக்கைகளையும் அப்போதைய காங்கிரஸ் கட்சியின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவர் இவற்றைப் பெற்றுக்
கொண்டதற்கு அத்தாட்சி ரசீது பெறப்பட்டது. ஆயினும், காங்கிரஸ் கட்சியின் சார்பில் இதற்கான பதில் எதுவும் திராவிட மகாஜன சபாவுக்கு அனுப்பப்படவில்லை. முஸ்லீம்களின்
சங்கமும் இதற்கான பதிலெதுவும் அளிக்க முன் வரவில்லை.இதைக்குறிப்பிட்டு அந்தக்காலத்தில் பெயர் பெற்ற செட்யூல்டு வகுப்பு மக்களின் தலைவர் அயோத்திதாசப் பண்டிதர்,
‘பிராமணர் காங்கிரஸ்’ என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார், அவ்வாறே முகம்மதியர் சங்கத்தையும் அவர் கண்டனம் செய்திருக்கிறார்.
1891 – இல் சென்னையிலிருந்த செடியூல்டு வகுப்பாரின் தலைவர்கள் ‘ஆதிதிராவிட மகாஜன சபா’ என்று இன்னொரு சங்கத்தை ஏற்படுத்தினர். இந்தச் சங்கமும்,
செட்யூல்டு வகுப்பாரின் நலன்களுக்காகப் பாடுபட்டது.
1892 – இல் சென்னை அரசாங்கம் அப்போது பதிவுத்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரலாக இருந்த எஸ்.ராகவ ஐயங்காரைச் சென்னை மாகாணத்தில் செடியூல்டு வகுப்பாரின்
முன்னேற்றம் பற்றி விசாரிப்பதற்கு நியமித்தது.
1892 – இல் நடந்த சாதி இந்துக்களின் மாநாடு ஒன்றில் கலந்து கொண்ட அயோத்திதாசப் பண்டிதரும் மற்றும் செடியூல்டு வகுப்பைச் சார்ந்த தலைவர்களும், செடியூல்டு வகுப்பைச்
சார்ந்த பிள்ளைகள் படிப்பதற்குக் கிராமங்களில் பள்ளிக்கூடங்களைத் திறக்க வேண்டுமென்றும், பயன்படுத்தப்படாமல் கிடக்கும் புறம்போக்கு நிலங்களை ஆங்காங்கே உள்ள
செடியூல்டு வகுப்பாருக்கு ஒதுக்கித் தர வேண்டும் என்றும் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டு தீர்மானங்கள் நிறைவேற்றினர். சாதி இந்துக்களின் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட
மேற்படி தீர்மானங்களை ராவ் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் ஒரு மாநாட்டைக் கூட்டி மீண்டும் நிறைவேற்றி அனுப்பினார். அப்போதைய சென்னை அரசாங்கம் இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக்கோண்டு,
நிலமில்லாத செடியூல்டு வகுப்பாருக்கும் முன்னாள் படை வீரர்களுக்கும் நிலங்களை ஒதுக்கி அளிக்கவும், பள்ளிகளைத் தொடங்கவும் உத்தரவு பிறப்பித்தது.
( அரசாணை எண்:1010 – வருவாய்த்துறை-நாள்:30.9.1892)
( அரசாணை எண்:1010 அ – வருவாய்த்துறை-நாள்:30.9.1892)
( அரசாணை எண்: (சென்னை) 68 – கல்வித்துறை-நாள்:1.12.1893)
1891 – ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பல மாநாடுகளையும் கூட்டங்களையும் செடியூல்டு வகுப்பு மக்கள் தொடர்ந்து நடத்தி இருக்கிறார்கள். (1891ஆம் ஆண்டில்தான்
ஈவேரா காசிக்குப் புனித பயணம் மேற்கொண்டார்)
தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் உரிமைகளுக்காக குரல் எழுப்பிய கூட்டங்கள், மாநாடுகள் பற்றிய விபரங்கள் பெரியவர் டி.பி.கமலநாதன் அவர்கள் எழுதிய Mr.K.Veeramani, M.A,B.L. is Refuted
and the Historical Facts about the Schedule Caste’s Struggle for Emancipation in South India என்ற நூலிலும், பெரியவர் அன்பு பொன்னோவியம் அவர்கள் எழுதிய உணவில் ஒளிந்திருக்கும்
சாதி என்ற நூலிலும் பல விபரங்கள் விரவிக்கிடக்கின்றன. தாழ்த்தப்பட்டவர்களின் போராட்டங்களைப் பற்றி அறிய விரும்புகிறவர்கள் அப்புத்தகங்களைப் படிக்கவும்.
மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதற்காக பல பத்திரிகைகளையும் தாழ்த்தப்பட்டவர்கள் நடத்தி இருக்கிறார்கள்.
1869 – சூரியோதயம், 1900 – பூலோக வியாசன்,
1871 – பஞ்சமன்
1877 – சுகிர்த வசனி
1885 – திராவிட பாண்டியன் – ஆசிரியர் : ஜான் ரத்தினம்
1885 – திராவிட மித்திரன்
1886 – ஆன்றோர் மித்திரன் – ஆசிரியர் : வேலூர் முனிசாமி பண்டிதர்
1888 – மகாவிகட தூதன் – ஆசிரியர் : டி.ஐ.சுவாமிக்கண்ணு புலவர்
1893 – பறையன் – ஆசிரியர் : இரட்டைமலை சீனிவாசன்
1898 – இல்லற ஒழுக்கம்
1900 – பூலோக வியாசன் – ஆசிரியர் : தசாவதானம் பூஞ்சோலை முத்துவீரப்புலவர்
1907 – தமிழன் – ஆசிரியர் : க.அயோத்திதாசப் பண்டிதர்
1907 – திராவிட கோகிலம் – சென்னை, செடியூல்டு வகுப்பு மதம் மாறிய கிறிஸ்தவச்சங்கத்தார் வெளியீடு.
1916 – தமிழ்ப் பெண் – ஆசிரியர் : சொப்பன சுந்தரியம்மாள் (அடிக்குறிப்பு 6)
இந்த இதழ்கள் சாதிக்கொடுமையையும், தீண்டாமையையும் எதிர்த்துப் போராடி வந்துள்ளன. தமிழன் வார இதழ் இந்த எதிர்ப்பு இயக்கத்திற்கு ஆற்றிய பணி குறிப்பிடத்தக்கது.
இதனால் செடியூல்டு வகுப்பு மக்கள், குறிப்பாகச் சென்னை, செங்கல்பட்டு, வடாற்காடு, தென்னாற்காடு மாவட்டங்களில் விழிப்புற்றனர். சிவில் உரிமைகளுக்கான
கோரிக்கைகள் எழுந்தன. இவற்றைப் பற்றிய விபரங்கள் செய்தி இதழ்களில் வெளிவரலாயிற்று.
1902 ஆம் ஆண்டில் கிராம மேய்ச்சல் நிலத்தில் ஆடு, மாடுகளை மேய்ப்பதற்கும், பொதுக்குளத்தில் தண்ணீர் எடுப்பதற்கும் இருந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து அப்போதைய
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தைச் சேர்ந்த ஒரத்தூர் கிராம மக்கள் சிவில் உரிமைப் போராட்டத்தை நடத்தினர். இந்த போராட்டத்தை முன் நின்று நடத்திய பண்டிதர் அயோத்திதாசர் இந்த
மக்களின் குறையை அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். தமிழன் இதழிலும் இதைப்பற்றி விரிவான செய்திகளை வெளியிட்டார்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதற்காக தொண்டுமனம் படைத்த தன்னலமில்லாத பலர் கல்விக் கூடங்களையும், இரவுப் பள்ளிகளையும், மாணவர் விடுதிகளையும் ஆரம்பித்தனர்.
சென்னை, வெஸ்லியன் மிஷன் பள்ளியைச் சார்ந்த ஜான் ரத்தினம் பிள்ளை, சென்னை, பிரம்மஞானச் சபையைச் சார்ந்த கர்னல் ஹென்றி ஸ்டீல் ஆல்காட் துரை, தங்கவயல்
செல்லப்ப மேஸ்திரி, எம்.ஏ.முருகேசம், ஆர்.ஏ.தாஸ், சிதம்பரம் சாமி சகஜானந்தா, பி.வி.சுப்பிரமணியம், இரத்தினம், திருச்சி வீராசாமி, எல்.சி.குருசாமி, பி.எஸ்.மூர்த்தி,
எம்.பழனிச்சாமி ஆகியோர் இவர்களில் குறிப்பிடத்தக்க சிலராவர்.
1937ல் அப்போதைய ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஜமேதார் ஆதிமூலம், பி.எத்துராஜ், தம்பிசாமி மேஸ்திரி, டி.முனிசாமி பிள்ளை ஆகியோர் முயற்சியால் வேலூரில் வட ஆற்காடு மாவட்ட
ஆதிதிராவிடர் கல்வி அபிவிருத்தி சங்கம் நிறுவப்பட்டது. 1938 இல் இந்தச் சங்கத்தின் சார்பில் தங்கவயல் ஆர்.ஏ.தாஸ் அவர்களின் தந்தையார் ராமதாஸ் பெயரில் மாணவர்
விடுதி ஒன்று ஏற்பட்டது. ராணிப்பேட்டையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஜெயராமன், ஏ.சுந்தரம், வி.எல்.மோகனம், ஜி.ஜெகன்நாதன், ஜே.வி.ராகவன், கங்காதரன்,
ஆர்.டி.எஸ்.மூர்த்தி, கே.பி.ஆறுமுகம் ஆகியோரின் அரிய முயற்சியால் தாத்தா இரட்டை மலை சீனிவாசன் மாணவர் விடுதி ஏற்பட்டது.
எம்.கிருஷ்ணசாமி, ஜே.ஜே.தாஸ், கே.எம்.சாமி, வி.எஸ்.சுப்பையா, ஆதிமூலம், டாக்டர் சுப்பிரமணியம் ஆகியோரும் பிறரும் ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக அயராது பாடுபட்டவர்களாவர்.
இதுமட்டுமல்ல,
மாண்டேகு குழுவின் அரசியல் சீர்திருத்தத்தைப்பற்றி தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிடர்கள் பல கூட்டங்களில் தங்கள் எண்ணங்களையும் எதிர்பார்ப்புகளையும் பகிர்ந்து கொண்டார்கள்.
நீதிக்கட்சியினர் அக்குழுவினரை சந்திப்பதற்கு முன்பே ஆதிதிராவிட ஜன சபையார் சந்தித்து விட்டார்கள்.(அடிக்குறிப்பு 7)
நீதிக்கட்சியும், ஈவேராவும் தங்களின் உரிமைகளைப் பற்றி சிந்தனை செய்யுமுன்னே தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் உரிமைகளைப் பற்றி சிந்தித்து அதற்காகப் போராடியுள்ளனர்.
தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் உரிமைக்காக தாங்களே போராடிய சரித்திர சான்று இப்படியிருக்க, நீதிக்கட்சி இல்லை என்றால் தாழ்த்தப்பட்ட மக்கள் ஊமைகளாய் இருந்திருப்பார்கள்
என்று கூறுவது அப்பட்டமான பொய் அல்லவா!
(தொடரும்)
அடிக்குறிப்பு :
1 – 5: நீதிக்கட்சி அரசு பாடுபட்டது யாருக்காக?, திராவிடர் கழக வெளியீடு
6 – 7: உணவில் ஒளிந்திருக்கும் சாதி, சித்தார்த்தா பதிப்பகம்
-- Edited by devapriyaji on Tuesday 23rd of August 2011 10:35:02 PM
__________________
Guru
Guru
Status: Offline
Posts: 9863
Date: Aug 23, 2011
RE: ஈ.வே.ரா - பெரியார்?
நீதிக்கட்சியின் மறுபக்கம் – 02
ம வெங்கடேசன்
திருட்டு எழுத்தும் புரட்டு வரலாறும்:
முதுபெரும் திராவிட இயக்க எழுத்தாளர் க.திருநாவுக்கரசு அவர்கள், ‘ களத்தில் நின்ற காவலர்கள்’ என்ற தலைப்பில் ஆதிதிராவிடத் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதி 1993ல்
வெளியிட்டார். இந்த புத்தகத்தில் தலித் தலைவர்களின் வரலாற்றைச் சுருக்கமாக திரட்டித் தந்துள்ளதாக அவர் தெரிவிக்கிறார். உண்மையில், இந்தப் புத்தகத்தில் உள்ள தகவல்களில்,
க.அயோத்திதாசர் பற்றிய தகவல்கள் மற்றும் பின்னிணைப்புகளைத் தவிர மற்றவை அனைத்தும் அறிஞர் அன்புபொன்னோவியம் எழுதியவை. அவற்றை அப்படியே திருடி க.திருநாவுக்கரசு எழுதியிருக்கிறார்.
அவர் எங்கிருந்து திருடினார் ?
1969ல் பதிவுசெய்யப்பட்ட செட்யூல்டு வகுப்பினர், மலைவாசியினர் சமூக நல மன்றம், சென்னை என்ற சங்கம் 1971ம் ஆண்டுக்கான ஒரு நாள்காட்டியை வெளியிட்டது. அந்த
நாள்காட்டியில்தான் அறிஞர் அன்புபொன்னோவியம் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் உயர்வுக்காகப் பாடுபட்ட தலைவர்களின் வாழ்க்கைக் குறிப்புகளை எழுதியிருக்கிறார். இந்த
நாள்காட்டியில் உள்ள தகவல்களை மீண்டும் அகில இந்திய பட்டியலினத்தோர், மலைவாசியினர், பிற்படுத்தப்பட்டோர், மற்றும் சிறுபான்மையோர் பணியாளர் நல சங்கத்தின் சார்பாக செட்யூல்
வகுப்பினர், மலைவாசியினர் சமூக நல மன்றம் 1974ல் வெளியிட்டது. இந்த நாள்காட்டியில் உள்ள தாழ்த்தப்பட்ட தலைவர்களின் வாழ்க்கைக் குறிப்புகளைகளைத்தான்
க.திருநாவுக்கரசு அவர்கள் அப்படியே “களத்தில் நின்ற காவலர்கள்” என்ற தன் நூலில் ‘பயன்படுத்தியிருக்கிறார்’.
இவர் இதைப் பயன்படுத்தியது தவறே இல்லை. ஆனால் அத்தகவல்களை எங்கிருந்து எடுத்தார், அதை மூல நூலில் யார் எழுதினார்கள் என்பவற்றை மறைத்ததுதான் தவறு. தன்மகன் உட்பட
பலருக்கு முன்னுரையில் நன்றி தெரிவித்த க.திருநாவுக்கரசு, அறிஞர் அன்புபொன்னோவியத்திற்கும் நன்றி தெரிவித்து இருக்கலாம். ஆனால், அப்படி நன்றி தெரிவித்திருந்தால்
அது தன் எழுத்து அல்ல என்று தெரிந்துவிடுமே என்ற காரணத்தால்தான் அவர் நன்றி தெரிவிக்கவில்லை. மேலும் ஒரு தாழ்த்தப்பட்டவர் எழுதியதைத் தாம் அப்படியே பயன்படுத்தியிருக்கிறோம்
என்ற நெருடலும்கூட அறிஞர் அன்பு பொன்னோவியத்தின் பெயரை வெளியே சொல்லாததற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
“களத்தில் நின்ற காவலர்கள்” என்ற இந்த நூல் உண்மையின் களத்தில் எதை நிரூபிக்கிறது ?
ஒரு தலித் எழுத்தாளரை, திராவிட இயக்கத்தவர் தொடர்ந்து இருட்டடிப்பு செய்து வருகிறார்கள் என்பதைத்தான் இந்த நூல் நிறுவுகிறது. அது மட்டுமா ?
இந்நூலின் 92ஆம் பக்கத்திலும் 154ம் பக்கத்திலும் பி. எம். மதுரைப்பிள்ளை பற்றிய தகவல்கள் வருகின்றன. ‘ புரவலர் பெருமகன் பி. எம். மதுரைப்பிள்ளை ’ என்ற தலைப்பில் 92ம் பக்கத்தில் பி. எம்.
மதுரைப்பிள்ளையைப் பற்றிப் பேசிவிட்டு, அவரைப் பற்றி மேலும் சில தகவல்களை மீண்டும் தருவதாக நினைத்து 154ம் பக்கத்திலும் மதுரைப்பிள்ளையைப் பற்றித் தகவல்கள் தருகிறார். அவை “ பி. எம். மதுரைப்பிள்ளை ” என்ற
தலைப்பில் திரு.வி.க வெளியிட்ட தகவல்கள் என்று குறிப்பிடுகிறார். அவரது குறிப்பின்படி, திருவிக தனது கட்டுரையில் 1921ஆம் ஆண்டு நடைபெற்ற வேலைநிறுத்தத்தில்
ஆதிதிராவிடர்க்கு உதவி புரிந்தவர் என்று மதுரைப்பிள்ளையைக் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது 92ம் பக்கத்தில் உள்ள மதுரைப்பிள்ளையும், 154ம் பக்கத்தில் உள்ள மதுரைப்பிள்ளையும் ஒருவரே என்ற முடிவில் அவர் எழுதியிருக்கிறார். ஆனால்,
உண்மை என்ன?
92ம் பக்கத்தில் உள்ள பி. எம் மதுரைப்பிள்ளை 1858ல் பிறந்து 1913ஆம் ஆண்டு இறந்துபோனவர். திருவிக குறிப்பிடும் எம்.சி. மதுரைப்பிள்ளை 1880ல்
பிறந்து 1935ல் இறந்தவர்.
திருவிக குறிப்பிடுவது எம். சி. மதுரைப்பிள்ளையை. திருநாவுக்கரசு குறிப்பிட நினைப்பதோ பி. எம் மதுரைப்பிள்ளையை.
( படங்கள் உதவி: அன்பு. பொ. ஆதிமன்னன்)
திருநாவுக்கரசு உண்மையிலேயே தேடி அலைந்து இந்த புத்தகத்தை எழுதியிருந்தால் இந்த உண்மைகள் அவருக்குப் புரிந்திருக்கும்! இது திருட்டுப் புத்தகம்தானே !
அதுவும் ஒரு ஆதிதிராவிட எழுத்தாளரின் புத்தகத்தைத்தானே திருடியிருக்கிறோம் என்ற நினைப்பில் எதையுமே ஆராயாமல் வெளியிட்டுவிட்டார் போலும். ஆனால் அறிஞர்
அன்புபொன்னோவியம் தான் எழுதிய “ மக்களுக்கு உழைத்த பெருமக்கள்” என்ற நூலில் தெளிவாக இருவரையும் பிரித்தே எழுதியிருக்கிறார். அது மட்டுமா ?
திருநாவுக்கரசுவின் இந்த புத்தகத்துக்கு அணிந்துரை எழுதியிருக்கிறார் திராவிட இயக்க எழுத்தாளரும், ஆய்வாளருமான (!) எஸ்.வி.ராஜதுரை. எப்பொழுதுமே தாழ்த்தப்பட்டவர்களால்
நடத்தப்பட்ட போராட்டங்களை – வரலாற்றை – தாழ்த்தப்பட்டவர்களால் போராடிப் பெற்ற உரிமைகளை – நீதிக்கட்சி, ஈவேரா இவர்களுக்கு உரிமையாக்கி விடுவார் இவர். இந்த புத்தகத்திலும்
அதுமாதிரியான ஒரு வரலாற்றுப் புரட்டலை செய்திருக்கிறார் எஸ். வி. ராஜதுரை.
இந்நூலின் அணிந்துரையில் “ தலித் தலைவர் எம்.சி.ராஜா நீதிக்கட்சியில் உறுப்பினராகவே தனது அரசியல் வாழ்வைத் தொடங்கினார். டாக்டர் நாயர்தான் தம்மை அரசியலில் ஈடுபடுத்திய
ஆசிரியர் என்று அவரே பல நேரங்களில் கூறியுள்ளார்” என்று எழுதியிருக்கிறார். ஆனால், “ டாக்டர் நாயர்தான் தம்மை அரசியலில் ஈடுபடுத்திய ஆசிரியர் ” என்று எம்.சி.ராஜா எங்கே,
எப்போது கூறினார் என்ற விபரத்தை மட்டும் தரவில்லை !! போகிற போக்கில் எழுதிச் சென்றுள்ளார்.
எம்.சி.ராஜா தன் அரசியல் வாழ்வை ஆதிதிராவிட மகாஜனசபையிலிருந்தே துவங்கினார். தனது 25வது வயதில் 1908ல் இருந்து பொதுத்தொண்டில் ஈடுபட ஆரம்பித்தார். 1916ல்
சென்னை ஆதிதிராவிட மகாஜன சபாவைச் சீரமைப்பதில் பெரும்பங்காற்றினார். அந்த சபாவின் கௌரவச் செயலாளராகவும் அவர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
36வது வயதில் 1919ல் சட்டமன்ற உறுப்பினரானார். 1927ல் நாடாளுமன்ற உறுப்பினரானார்.
இதுதான் உண்மை. எம். சி. ராஜாவை அரசியலில் கொண்டு வந்தது ஆதிதிராவிட மகாஜனசபை. ஆனால், அவரை அரசியலுக்குக் கொண்டு வந்த பெருமையை நீதிக்கட்சியைச் சேர்ந்த
டாக்டர் நாயருக்குத் தானம் செய்து விட்டார் எஸ். வி. ராஜதுரை. அது மட்டுமா ?
இந்த நூலில் “சில சாதனைகளும் தகவல்களும்” என்ற தலைப்பில் நீதிக்கட்சி ஆட்சியில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்னென்ன உரிமைகள் பெறப்பட்டன என்பதையெல்லாம்
எழுதியிருக்கிறார். அவருடைய நோக்கம் தாழ்த்தப்பட்டத் தலைவர்களின் வரலாற்றை எழுதுவதல்ல. அனைத்துச் சாதனைகளும் நீதிக்கட்சியால் மட்டுமே பெறப்பட்டது என்று நிலைநிறுத்தவே இந்தத்
தகவல்களைச் சேர்த்திருக்கிறார் .
வரலாற்றை தம் எண்ணத்திற்கு ஏற்ப மாற்றி எழுதுவதிலும், அதை நம்ப வைக்க, எழுதியவற்றையே மீண்டும் மீண்டும் எழுதுவதிலும் இந்த திராவிட இயக்க எழுத்தாளர்கள் மிக திறமைசாலிகள்தான்.
ஒரு பொய்யைத் தொடர்ந்து சொன்னால்தான் உண்மை என்று அது நம்பப்படும் என்று நன்கு தெரிந்தவர்கள் அவர்கள். இல்லையென்றால், சமீபத்தில்,
பத்து வருடங்களுக்கு முன்பு எழுதிய நூல்கள்வரை இப்படிப்பட்ட பொய்களைத் தொடர்ந்து எழுதுவார்களா? பொய்களைத் தருவது மட்டுமல்ல. உண்மைகளையும்
இருட்டடிப்பு செய்திருக்கிறார்கள். தாழ்த்தப்பட்டவர்களின் வரலாற்றை, திராவிட இயக்கத்தார் இருட்டடிப்பு செய்யும் வரலாற்றை, இத்தொடரின்
ஒவ்வொரு அத்தியாயத்திலும் நாம் பார்க்கத்தான் போகிறோம். இதோ.
நீதிக்கட்சி தோன்றுவதற்கு முன்பே தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் உரிமைக்காக போராடிய வரலாறுகள் பல உண்டு. அப்படிப் போராடிய தாழ்த்தப்பட்ட தலைவர்களையும் அவர்களின் போராட்டங்களையும்
பற்றிச் சுருக்கமாகப் பார்ப்போம்.
பண்டித க. அயோத்திதாசர் (1845 – 1914):
சமுதாயத்திலிருந்து அறியாமையை நீக்கவும், உயர்வு தாழ்வு மனப்பான்மையைக் கண்டித்தும், மக்களைச் சிந்திக்க தூண்டும் வகையில் பல
நூல்களை எழுதினார். 1886லிருந்து பகுத்தறிவுக் கொள்கையை முதன் முதலில் தமிழகத்தில் பரவச் செய்த பெருமைக்குரியவர்.
கிராமங்களில் உள்ள நிலமற்ற விவசாயிகளுக்கு நிலமும், இடுகாடு-சுடுகாடு போன்றவைகளும் கிடைக்க வழிசெய்தவர். மருத்துவத்திலும் இவர்
சிறந்து விளங்கினார்.
1889ல் கர்னல் ஆல்காட், மேரி பால்மெர், ஆனி பெசன்ட் உதவியுடன் நகரில் பல பள்ளிகளை அமைத்தார். 1902ல் தென்னிந்திய
பௌத்த சாக்கிய சங்கத்தை நிறுவினார். சமயம், சமுதாயம், கல்வி ஆகிய துறைகளில் மக்களுக்கு இடைவிடாமல் பணியாற்றினார்.
1907ல் தமிழன் என்ற பத்திரிகையைத் துவக்கினார். இது இலங்கை, பர்மா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா போன்ற கடல்கடந்த நாடுகளிலும்,
இந்தியா முழுவதிலும் பவனி வந்தது. அவர் படைத்த நூல்களில் ‘ புத்தரது ஆதிவேதம் ’ அவரது ஆராய்ச்சித் திறனுக்கு ஓர் சான்றாகும்.
இரட்டைமலை சீனிவாசனார் (1860 – 1945)
இவர் நீலகிரியில் வணிகத்துறை கணக்காயராக பணியாற்றினார். சென்னையில் குடியேறிய பின் 1882லிருந்து 1885வரை பல
அரசாங்க குறிப்பேடுகளையும், வரலாற்று நூல்களையும், கல்வெட்டுகளையும் ஆராய்ந்தார். தென்னிந்தியா முழுவதிலும்
சுற்றுப்பயணம் செய்து மக்களின் அன்றாட வாழ்ககை நிலைமைகளை நேரில் கண்டறிந்தார். 1884ல் தியோசஃபிகல் சொசைட்டியின்
ஆண்டு விழாவில் கலந்துகொண்டார். ஆனால், அவ்வமைப்பு பழங்குடி மக்களுக்குப்
பயன்படாது என்று உணர்ந்து அப்பேரவையிலிருந்து விலகினார். பழங்குடி மக்கள் வாழும் பகுதிகள் தோறும் சென்றார். உலக
அறிவு தடுக்கப்பட்ட அவர்களிடம் அவர் கல்வி கற்றல், சுகாதாரத்துடன் இருத்தல், சுத்தமான ஆடைகளை அணிதல், ஒழுங்காகப்
பேசுதல் போன்றவற்றின் அவசியத்தை உணர்த்தினார். 1891ல் ஆதிதிராவிட மகாஜன சபையில் திறம்பட பணியாற்றினார். 1892ல்
‘ பறையன் ’ என்ற பத்திரிகையைத் தொடங்கி மக்கள் விழிப்படையும் வகையில் பல அரிய கருத்துக்களை வெளியிட்டார்.
1893ல் ராயப்பேட்டை வெஸ்லி பள்ளியில் பழங்குடி மக்களின் மாநாட்டைக் கூட்டினார். இதுவே பழங்குடி மக்களுக்காக
இந்தியாவில் கூட்டப்பட்ட முதல் மாநாடாகும். 1900 வரை எண்ணற்ற மாநாடுகளைக் கூட்டி மக்கள் நலன் அடையவும், பாதுகாப்புப்
பெறவும் ஆங்கில அரசிடம் ஓயாமல் போராடினார். பிறகு, இங்கிலாந்து செல்ல புறப்பட்டு, இடையில்
தென்னாப்பிரிக்கா சென்று அரசாங்கப் பணியை மேற்கொண்டார். அங்கும்கூட இந்தியப் பழங்குடி மக்களின்
நலனில் அக்கறை கொண்டிருந்தார். அங்கிருந்தவாறே இந்திய மக்களின் நல்வாழ்விற்காகச் சிந்தித்தார்,
செயல்பட்டார். 1921ல் மீண்டும் இந்தியாவிற்கு வந்து, சமுதாய பணியில் தீவிரமாக ஈடுபட்டார். 1922ல் சென்னை சட்டசபைக்குத்
தெரிந்தெடுக்கப்பட்டார். 1925ல் தீண்டாமை ஒழிய பல திட்டங்களைத் தந்தார். 1930ல் லண்டன் வட்டமேஜை மாநாட்டிற்கு இந்திய பழங்குடி மக்களின் சார்பில்
கலந்துகொண்டார்.
1932ல் பூனா ஒப்பந்தத்தில் பொறுப்பேற்று அண்ணல் அம்பேத்கருடன் இணைந்து பணியாற்றினார். சென்னை சட்டமன்ற உறுப்பினராகவும்
தொடர்ந்து தொண்டாற்றினார்.
பழங்குடி மக்களின் பாதுகாவலன் எம்.சி. ராஜா (1883-1945)
இவர் இளமையில் ஆசிரியராகப் பணியாற்றினார். மாணவர்களுக்குப் பல நூல்களை எழுதினார். 1936ல் நுங்கம்பாக்கத்தில
‘திராவிடர் பள்ளியை’ துவக்கி வைத்தார். நகர் முழுவதிலும் இரவுப் பள்ளிகளை நிறுவ தூண்டுதலாக இருந்தார். சென்னை மாநகர
சாரணர் குழுவின் தலைவராகப் பலகாலம் இருந்து ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளும்
பண்பாட்டை வளர்த்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பழங்குடி மாணவர்களை 1927லிருந்து சேர்த்துக் கொள்ள
வகை செய்தார்.
இளம் வயதிலேயே மாநில ஆதிதிராவிட மகாஜன சபையின் செயலாளராகத் தொண்டாற்றினார். பேச்சுத்திறன்
மிகுந்த இவர் மக்களிடம் கால நிலைமையையும், அவர்களுடைய கடமையையும் தெளிவாகச் சுட்டிக் காட்டினார்.
1917லிருந்து பழங்குடி மக்களின் தீண்டாமை ஒழிப்பு, ஆலய நுழைவு போன்ற போராட்டங்களில் அவர் ஆற்றிய பணி சிறப்பானதாகும்.
1919ல் சென்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு பாராளுமன்றத்திலும் பணியாற்றினார்.
பழங்குடி மக்களுக்கிருக்கும் இன்னல்களும், இழிவுகளும் நீங்கி முன்னேற அரசியல் அதிகாரம் பெற வேண்டினார். இதற்காக
பட்லர் கமிட்டி, மாண்டேகு-செம்ஸ்போர்ட், சைமன் கமிஷன் போன்ற பல குழுக்களைச் சந்தித்து சாட்சியம் கூறினார். 1929ல் லண்டன்
சென்று பழங்குடி மக்களின் நலனுக்காகப் போராடினார். 1930ல் வட்டமேஜை மாநாட்டிற்காக அரிய
கருத்துக்களை வெளியிட்டார். கூட்டுத்தொகுதியுடன் கூடிய தனித்தொகுதி முறையை முதலில் கூறியவர் இவர்தான்.
மக்களுக்காக அரசியலே தவிர அரசியலுக்காக மக்கள் அல்ல என்பது இவருடைய வாதமாகும். சிறிது காலம் தமிழக அமைச்சராக பணியாற்றினார்.
இறுதிக்காலம் வரை சட்டமன்றத்தில் தொண்டாற்றினார்.
சிந்தனைச் செம்மல் பேராசிரியர் என். சிவராஜ் (1892-1964)
பட்டப்படிப்பிற்குப் பிறகு சிறிது காலம் உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். பிறகு சட்டக்
கல்லூரி விரிவுரையாளராகவும், பேராசிரியராகவும் இருந்தார். இவர் இளமையிலிருந்தே பழங்குடித்
தலைவர்களோடு இணைந்து தொண்டாற்றினார். தன்னுடைய கருத்தாழமிக்க உரைகளால் மக்களால் நல்ல
சிந்தனையாளராக இவர் மதிக்கப்பட்டார். மக்களுக்காகப் பல கூட்டங்களையும் மாநாடுகளையும் கூட்டி சிறந்த கருத்துக்களைக்
கூறினார். நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் இவரை நன்கு பயன்படுத்திக் கொண்டன.
1922ல் சென்னை சட்டமன்ற உறுப்பினரானார். நகரின் பல இடங்களில் மாணவர் விடுதிகள் தோன்றக்
காரணமாயிருந்தார். மக்கள் சொந்த நில விவசாயிகளாக மாறாத வரையில், அவர்களுடைய
அடிமைமுறை மாறாது என்ற கொள்கையை உடையவர். சட்டமன்றத்தின் பல்வேறு குழுக்களில் இடம்பெற்று சிறப்பாக
பணியாற்றினார். 1945ல் மாநகராட்சி மேயரானார். 1942ல் தொகுக்கப்பட்டோர் சம்மேளனத்தின் அகில இந்திய
தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சான்பிரான்ஸிஸ்கோ மாநாட்டில் கலந்துகொண்டு இந்திய ஏழை மக்களின் இடர்பாடுகளை விளக்கினார்.
1946ல் மக்களின் இழிவுகளை நீக்கி இன்னல்களை போக்க ஏதும் நடவடிக்கை எடுக்காததால் ஆங்கில அரசை எதிர்த்து அவர்கள் தந்த திவான் பகதூர் என்ற
பட்டத்தை உதறித்தள்ளினார். இந்தியர்களையும், ஆங்கிலேயர்களையும் தட்டிக்கேட்கும் வகையில் 1946ல் ஜெய்பீம் என்ற ஆங்கில வார இதழை துவக்கி நடத்தினார்.
தொகுக்கப்பட்டோர் சம்மேளனம் அரசியல் இயக்கமாக மாறியபோதும் அதனுடைய அகில இந்திய தலைவராகவே நீடித்தார். 1956ல் பேரறிஞர் அம்பேத்கர் அவர்கள்
உருவகப்படுத்திய அகில இந்திய குடியரசு கட்சியை உருவாக்கி அதன் காப்பாளராகவும் ஒப்பற்ற தலைவராகவும் விளங்கினார். 1944லும் 1960லும் பாராளுமன்ற
உறுப்பினரானார். அங்கு பல செயற்குழுக்களில் பங்கேற்று நாட்டிற்கு செயல்வகை மிகுந்த திட்டங்களை தந்தார்.
புரவலப் பெருமகன் பி.எம். மதுரைப்பிள்ளை(1858 – 1913)
1877ல் சென்னை கவர்னராக இருந்த பக்கிங்ஹாம் பிரபுவிடம் எழுத்தராக பணியாற்றினார். பிறகு ரங்கூன் ஸ்ட்ராங் ஸ்டீல் என்ற அமைப்பின் ஊழியரானார்.
வாணிபத்தில் நன்னடத்தையும் நம்பிக்கைக்குரியவர்ராகவும் இருந்தவர். துபாஷ் ஸ்டீவ்டேன் என்ற ஏற்றுமதி இறக்குமதி வர்த்தக நிறுவனத்தை சுயமாக ஆரம்பித்துத்
திறமையாக நடத்தினார். இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ், நார்வே, இத்தாலி, எகிப்து ஆகிய மேலைநாடுகளுக்குச்
சுற்றுப்பயணம் செய்தார்.
தன்னுடைய வருவாயில் ஒரு பகுதியை இந்து கோயில்களுக்கென்று நிரந்தரமாகக் கொடுத்து வந்தார். சொந்தமாக ஒரு கோயிலையும் கட்டினார்.
இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், குறுகிய மனிதாபிமானியாக இல்லாமல், கிறிஸ்துவர்களாலும், முகம்மதியர்களாலும் நடத்தப்பட்டு வந்த
ஸ்தாபனங்களுக்கும்கூட உதவி புரிந்து வந்தார். சமூகத்தில் காணப்படும் கோளாறுகளுக்கு, கல்விதான் சரியான மருந்து என்பதை உணர்ந்து ஒரு உயர்நிலை பள்ளியைக்
கட்டினார். அறிவுக்கு உகந்த நல்ல கதைகளையும், கருத்துக்களையும் அச்சிட்டு இலவசமாக மக்களுக்கு வழங்கினார்.
1885லிருந்து 1900 வரை ரங்கூன் முனிசிபாலிடி கமிஷனராக இருந்தார். சுமார் 25 ஆண்டுகள் இரண்டாவது வகுப்பு கௌரவ நீதிபதியாக பணியாற்றினார். டர்பன்
மருத்துவமனைக்கு ஒரு பெருந்தொகையை நன்கொடையாக கொடுத்து உதவினார். பழங்குடி புலவர் பெருமக்கள் இவர் மீது கவிபாடி பல
உயர்ந்த பரிசில்களை பெற்றிருக்கிறார்கள். இவரை கிறிஸ்தவ, முகம்மதிய புலவர்களும் பாடியுள்ளனர். சுமார் 500க்கும் மேற்பட்ட புலவர்கள் பாடிய பாக்களைக்
கொண்ட 1500 பக்கங்களுடைய ‘மதுரை பிரபந்தம்’ என்ற நூல் ஒன்றே இன்றும் அவர் புகழ் பாடி நிலவுகிறது. இவர் 1906ல் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரிடம் சிறந்த
பொதுத் தொண்டர் என்ற அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.
மக்களுள் மாணிக்கம் டி. ஜான்ரத்னம் (1846-1942)
ஸ்பென்ஸர் கம்பெனியில் ஊழியராகப் பணியாற்றினார். சமூகத்திலிருக்கும் கொடுமைகளுக்கும் சமயத்துறையில் நிலவும் வெறிச்
செயல்களுக்கும் கலைக்கல்வி, தொழிற்கல்வி ஆகியவைகளால் ஏற்படும் பொருளாதார முன்னேற்றமே நல்ல மாற்றமாகயிருந்து பழங்குடி மக்கள்
எதிர்காலத்தில் வளர வைக்கும் என்று நம்பிய இவர் 1886ல் ஒரு ‘மாதிரிப் பள்ளியை’ நிறுவினார். அப்பள்ளி பயனளிப்பதை அறிந்து 1892ல் ஆண்-பெண் இருபாலரும்
படிக்க ஆயிரம் விளக்கில் பெரியதொரு கல்விக்கூடத்தை அமைத்தார். அவரே தலைமை ஆசிரியராக இருந்து பணியாற்றினார். மேலும், மக்கிமா நகர்,
தேனாம்பேட்டை போன்ற பகுதிகளிலும் பள்ளிகளைத் தொடங்கினார்.
இவையன்றி சித்திரம், தச்சு, தையல் போன்றவைகளைக் கற்கும் தொழிற்கல்வி கூடம் ஒன்றையும், மாணவர் விடுதியையும் 1889ல் தோற்றுவித்தார். 1877ல் புனிதரான அவர்,
அதற்கு முன்னும் பின்னும் சமயத்துறையில் சிக்கலற்ற வண்ணம் மக்களை கவரத்தக்க பணியில் ஈடுபட்டார். 1885ல் திராவிட பாண்டியன் என்ற தமிழ் வெளியீட்டைத்
துவக்கித் திறமையான வாதங்களால் மக்களை விழிப்படையச் செய்தார்.
அன்றைய சூழ்நிலையில் பழங்குடி மக்கள் பல்வேறு பெயர் கொண்ட அமைப்பைக்களில் இயங்க ஆரம்பித்தனர். இவர் 1892ல் ‘திராவிடர் கழகம்’ என்ற
அமைப்பை துவக்கி அதனைச் சமுதாயப் பணியில் ஈடுபடுத்தினார். இதற்கான பல அறிவு சார்ந்த விளக்கங்களை வெளியிட்டார். 1897லிருந்து சிலகாலம் கௌரவ
நீதிபதியாக தொண்டாற்றினார். பழங்குடி மக்களின் வாழ்விலும் வளத்திலும் அக்கறை கொண்டிருந்த இவர் அவர்களுக்கு குடியிருக்கவும்,
பள்ளி கூடத்திற்கும் நிலம் பெறவும் கவர்னரைப் பார்த்து முறையிட்டு அவற்றைப் பெற்றுத்தந்தார். பழங்குடி மக்களை ஓரணியில் திரட்ட இணைப்புப் பாலமாக
கூடுமிடம் ஒன்றை சுமார் நூறு ஏக்கர் நிலத்தில் சமூகக் கூடத்துடன் அமைக்க முயன்றார். பழங்குடி மக்களுள் எழுந்த கிறிஸ்தவர், பௌத்தர், சைவர், வைணவர் போராட்டங்களால்
இது தடைபட்டு விட்டது.
பெரும் வணிகர் பி.வி. சுப்ரமணியம் (1859 – 1936)
தொழிலில் நாணயமும், செயலில் திறமையும், நம்பிக்கையும் கொண்ட இவர் வணிக துறையில் அயராது உழைத்தார். ஏராளமாக பொருள்
சேர்த்தார். ஊறுகாய் மன்னர் என்று பலராலும் உலகமெங்கும் புகழப்பட்டார். அவர் தம் ஊறுகாய் வகைகளை இங்கிலாந்து பேரரசர் குடும்பத்தினர் முதல்
உலகத்தின் எல்லாப்பகுதி மக்களும் அதனை பெரிதும் விரும்பினர். இவர் தமிழகத்தின் கோடீஸ்வரர்களில் ஒருவராவார். இவர் பழங்குடி மக்களின் சமய
நெறியாளர்களான தட்சிணாமூர்த்தி சுவாமிகள் போன்றவர்களை ஆதரித்தும், அவர்களுக்கு தலமெடுத்தும் அவற்றுக்கு காப்பாளராகவும்,
பல்வேறு சமயத்துறைகளுக்கும் பேருதவியாயிருந்தார்.
பழங்குடி மக்கள் அனைவரும் கல்வியை – குறிப்பாக ஆங்கில கல்வியைப் பெற வேண்டுமென்பது இவரது ஆசையாகும். எனவே பல
சிறு பள்ளிகளுக்கு பொருளுதவி செய்து ஊக்குவித்தார். 1920ல் வேங்கடாசலம் ஏழையர் பள்ளியை சிந்தாதிரிப்பேட்டையில் துவக்கினார். இன்றும்
அது நடைபெற்று வருவது பெருமைக்குரியதாகும். பலமுறை ஒரு பெரிய பள்ளியைத் தோற்றுவிக்க முயற்சித்தார். சமுதாயத்தில் அன்றுள்ள சமய சமுதாய
உட்போராட்டங்களாலும் வேறு காரணங்களாலும் அது தடைபட்டுவிட்டது. வணிகத் துறையில் பெரிதும் ஆழ்ந்திருந்த இவர் தமது மக்களின் நல்வாழ்விலும்
அக்கறை கொண்டிருந்தார்.
தமிழ் மக்களுள் இருக்கும் பிளவுகளையும் பிணக்குகளையும் ஒழிக்க வேண்டுமானால் ஒரே பெயரின் அடிப்படையில் இயங்க வேண்டும் என்று எண்ணினார். எனவே 1922ல்
திராவிடர் – ஆதிதிராவிடர் ஆகிய இருபெரும் வகுப்பினரையும் மாநாட்டின் வாயிலாக ஒன்று கூட்டி அறிவுரை வழங்கினார். பழங்குடி மக்களால்
நடத்தப்பெறும் கூட்டங்களுக்கும் மாநாடுகளுக்கும் ஆகும் செலவினங்களை இவரே ஏற்றுக் கொள்வார். தலைவர்கள் வெளியூர்களுக்கும்,
அயல்நாடுகளுக்கும் செல்லும்போதெல்லாம் அவர்களுக்கு உடை, வழிச்செலவு போன்றவற்றை கொடுத்து உதவுவார். சமுதாயத்தில்
பழங்குடி மக்களுக்கு ஏற்படும் இன்னல்களுக்கு கவர்னர் வைசிராய் போன்றோரிடம் முறையிட்டு அவ்வப்போது பயன் காணுவார்.
வி.ஜி. வாசுதேவப்பிள்ளை (1878 – 1938)
இவர் வள்ளல் ரங்கூன் மதுரைப்பிள்ளை அவர்களின் மருமகனும் தலைவர் சிவராஜ் அவர்களின் மாமனாருமாவார். கல்லூரிப் படிப்பை இடையில் நிறுத்திவிட்டு 1900ஆம்
ஆண்டு முதல் சமுதாயத் தொண்டில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். நமது மூத்த தலைவர்களான ஆர்.சீனிவாசன்,
எம்.சி.ராஜா போன்றோர்களிடையே தனித்தன்மை வாய்ந்த தலைவராக திகழ்ந்தார். 1912 முதல் சிறிதுகாலம் ரங்கூன் சென்று வள்ளல் மதுரைப்பிள்ளை பள்ளியின்
கண்காணிப்பாளராக பணியாற்றி மீண்டார். சென்னை மாநில சிறையதிகாரியாகவும் அலுவலாற்றினார். பொதுத்தொண்டில்
தீவிரமாக செயல்பட்டுப் பல அரிய ஆலோசனைகளையும், திட்டங்களையும் தந்ததின் மூலமாக பலராலும் பாராட்டப்பட்டார். பழங்குடி மரபில் இந்தியாவிலேயே முதல்
மாநகராட்சி உறுப்பினராக (1920ல்) ஆக்கப்பட்ட பெருமைக்குரியவர்.
அவரது உழைப்பின் நினைவாக சென்னை வால்டாக்ஸ் நெடுஞ்சாலையில் வாசுதேவ பிள்ளை பூங்கா ஒன்று அமைக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
தொடர்ந்து இவர் பல்வேறு அமைப்புகளில் பங்கு கொண்டு திராவிட, ஆதித்திராவிட மக்களுக்கென பல
மாநாடுகளை கூட்டுவித்து பொதுவாக மக்கள் வாழ்க்கைப் பிரச்சினைகளுக்காகப் போராடினார். இவற்றில் 1928-1925ம் ஆண்டுகளில் பச்சையப்பன்,
வெஸ்லியன் கல்லூரிகளில் நடைபெற்ற மாநாடுகளின் நடவடிக்கைகளையும், கவர்னரிடம் சென்று வலியுறுத்தியதையும் சிறப்பாகக் கூறுவார்கள். 1935ம்
ஆண்டிலிருந்து சென்னை சட்டமன்ற உறுப்பினராகவும் அரசாங்கம் அமைத்த பல்வேறு குழுக்களில் பங்கேற்று மக்களுக்கும் நாட்டிற்கும் அரிய பல
சேவைகளை செய்தார்.
ராவ் சாகேப் வி. தர்மலிங்கம் பிள்ளை (1872-1944)
இவர் 1872ல் சென்னையில் பிறந்து ரங்கூனில் வளர்ந்தார். தனது கல்லூரி படிப்பிற்குப் பிறகு கணக்கியல் துறை அதிகாரியாகவும் வருவாய்த்துறை அதிகாரியாகவும்
பணியாற்றினார். 1860ல் பழங்குடி மக்களின் பாதுகாவலர்கள் பலர் பல நூல்களையும், பத்திரிகைகளையும் வெளியிட்டு அவை கடல்
கடந்து சென்று மக்களை விழிப்படைய செய்தன. அவற்றின் மூலம் உணர்ச்சி பெற்றவர்களில் தலைவர் தர்மலிங்கமும் ஒருவர்.
ரங்கூன், சிங்கப்பூர், சிலோன், தென்னாப்பிரிக்கா போன்ற இடங்களில் குடியேறிய மக்களின் வாழ்க்கைத் தடுமாற்றங்களையும், இந்தியாவிலுள்ள இழிவான
நிலைகளையும் உணர்ந்த அவர் இந்தியாவிற்கு திரும்பியவுடன் சிறிதுகாலம் கூட்டுறவு சங்கங்களின் தலைவராகவும், கௌரவ நீதிபதியாகவும் தொண்டாற்றிக்
கொண்டே சமுதாயத் தொண்டில் அதி தீவிரமாக ஈடுபட்டார்.
1917, 1923 ஆண்டுகளில் மாண்டேகு-செம்ஸ்போர்ட், சைமன் கமிஷன் போன்ற குழுக்களின் சீர்திருத்த ஆய்வின்போது எழுந்த கொந்தளிப்பில் பழங்குடி மக்களின்
தலைவர்களோடு இணைந்து விரைந்த முன்னேற்றத்திற்கு அரிய திட்டங்களைத் தந்தார். வட்டமேஜை மாநாடு, பூனா ஒப்பந்தம் போன்ற காலங்களில் தலைவர்களில் சிலர்
வேறு இயக்கங்களுக்கு இழுக்கப்பட்டார்கள். அதற்குப் பலியாகாமல் தனித்து நின்று ஷெட்யூல்டு வகுப்பினர் நன்மை ஒன்றையே கருத்தில் கொண்டு பல
மாநாடுகளைக் கூட்டி தீர்மானத்தினை நிறைவேற்றக் காரணமாக இருந்தார்.
சிறிது காலம் கௌரவ நீதிபதியாகவும் பணியாற்றினார். 1928-1932 வரை சென்னை சட்ட மன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுச் சிறப்பாகப் பணியாற்றினார்.
வடசென்னையில் பல சங்கங்கள், இரவுப் பள்ளிகள், கூட்டுறவு பண்டக சாலைகள் போன்றவைகள் இவரது தலைமையில் சிறப்பாக தொண்டாற்றின. ராயல்
கமிஷன், ஹாமன்ட் குழு போன்றவைகளில் பழங்குடி மக்களின் விரைந்த முன்னேற்றத்திற்கு பல அரிய திட்டங்களை தந்திருக்கிறார்.
மாண்புமிகு தலைவர் ம. பழனிச்சாமி (1870-1941)
1900வரை தவத்திரு கங்காதர நாவலர் அவர்களின் அன்பு மாணவராக இருந்து திருப்பணிக் கூட்டம் என்ற அமைப்பால் மக்களிடையே அருள்நெறி பரப்பி வந்தார்.
நற்பழக்கம், நல்லொழுக்கம் போன்ற அறநெறிகளால் மக்கள் விழிப்படைய முதுபெரும் ஞானமார்க்க
பெருந்தொண்டர்களுக்கு உறுதுணையாக இருந்து தொண்டாற்றினார். நுங்கம்பாக்கம் பாலசுப்ரமணி ஆலயத்தின் ஸ்தாபகராகவும்,
திருக்காப்பாளராகவும் பலகாலம் இருந்து பணியாற்றினார்.
1921ல் மாணவர் விடுதியை ராயப்பேட்டையில் துவக்கி கவனமாகவும், பாதுகாப்பாகவும் மாணவர் படிக்க வகை செய்தார். ஒழுக்கமும் புலமையும்
ஒருவரை சமூகத்தில் உயர்த்த வல்லது என்பதற்கு இவர் ஓர் உதாரணமாக திகழ்ந்தார். இவருடைய நற்பண்புகளாலும் புலமையாலும் ஈர்க்கப்பட்ட
சங்கராச்சாரியார் அவர்கள் இவருக்கு 1923ல் பொன்னாடை போர்த்தி பெருமைப்படுத்தியது நல்ல சான்றாகும்.
இவர் சோதிட கணிதத்திலும் தேர்ந்தவர் என்று பலராலும் புகழப்பட்டவர். சமூக எழுச்சிப் பணியில் பெரும் பங்கு கொண்டார். பழந்தலைவர்களுடன் இணைந்து பல
மாநாடுகளையும் கூட்டங்களையும் கூட்டினார். பெருந்தலைவர் எம்.சி.ராஜா அவர்களுடன் சமுதாய-அரசியல் துறைகளில் தீவிரமாக பாடுபட்டவர்களில் இவரும்
ஒருவர்.
1929ல் பழங்குடி மக்களால் செய்யப்பட்ட வகைவகையான உண்ணும் பண்டங்களையும், தச்சு, தையல் போன்ற பொருள்களையும் தொழில்
திறனை காட்டும் வகையில் காட்சியில் வைத்தார். 1917ல் எழுந்த அரசியல் எழுச்சியில் டாக்டர் நாயருடனும் பெருந்தலைவர்களுடனும் இணைந்து அயராது உழைத்தார்.
‘திராவிடர் வாலிபர் சங்கம்’ போன்ற பல்வேறு அமைப்புகளில் தலைவராக இருந்து தொண்டாற்றினார். 1931ல் சென்னை மாநகராட்சிக்கு போட்டியிட்டார்.
சுவாமி தேசிகாநந்தா (1877-1949)
அரசியலில் மதத்தையும், மதத்தில் சமுதாயத்தையும் போட்டுக் குழப்பிய பல பெரியவர்களை நாம் கண்டவர்கள்தான். அகப்புறத் துறைகளான அரசியல், சமயம்,
சமுதாயம், கல்வி, தொழில் போன்ற அனைத்து துறைகளிலும், தனித்தனியாக சிறப்புடன் பணியாற்றி மக்களைக் குழப்பமடையச் செய்யாமல் முன்னேற்றியவர்
ஒருவர் தமிழகத்தில் உண்டென்றால் அது சுவாமி தேசிகானந்தா அவர்களேயாவார்கள்.
இவர் 1877ல் சென்னை பெரம்பூரில் பிறந்தார். நல்ல குடும்பத்தின் செல்வப் புதல்வனாக சீலமாக வளர்க்கப்பட்டார். எம்.ஏ. படிப்போடு கல்வியை நிறுத்திக்
கொண்டு 1917ல் எழுந்த அரசியல் சமுதாய சூழ்நிலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அதிதீவிரமாக பணியாற்றினார். இவர் ஆங்கிலம், தமிழ்
மொழிகளில் தேர்ச்சியோடும், பல இலக்கியங்களில் புலமையும் நாவன்மையும் படைத்தவராகவும் இருந்தார்.
1918ல் பழங்குடி மக்களை உய்விக்க பல பள்ளிகளைத் தோற்றுவித்தார். இதில் ஜியோர்ஜ் பேரரசர் பேரால் தொடங்கிய பள்ளி குறிப்பிடத்தக்கது.
இவற்றோடு மக்களுக்கு வீட்டுமனை வழங்கவும், சிறுதொகை மூலம் பொருளாதாரத்தை விருத்தி பண்ண கடன் வசதி தரும் கூட்டுறவு சங்கங்களையும்
ஏற்படுத்தினார். பக்கிங்ஹாம் கர்நாடிக் தொழிலகத்தின் மேற்பார்வையாளராகவும், தொழிலாளர் அதிகாரியாகவும் கௌரவ நீதிபதியாகவும்
பணியாற்றினார்.
1920ல் தவத்திரு. தேசிகானந்தா பெரம்பூர் பக்கிங்ஹாம் கர்நாடிக் மில்லில் நடந்த கலவரத்தில் முக்கிய பங்கேற்றார். இதில் பங்குகொண்ட
மற்றொரு தலைவர் எம்.சி.ராஜா அவர்களாவார். பழங்குடி மக்களை வேலை நிறுத்தத்திலிருந்து விலக்கி தலித்துகள் மில்லில் தொழில் கற்பதற்குத்
துணை செய்தார். மில்லில் பெரும் பகுதிகளில் தலித்துகள் நுழைய முடியாதிருந்த நிலையை மாற்ற இவர் பேருதவியாக இருந்தார். பழங்குடி மக்களுக்கு மில்லில்
அதிகரித்து வரும் வேலை வாய்ப்பு நிலையைக் கண்டு மேல் சாதிக்காரர்களுக்கு வேலையில்லாமல் போய்விடுமென்று பயந்து சர். சி. பி. தியாகராய செட்டியார்,
திரு.வி.க. போன்ற உயர்த்தப்பட்ட சாதி இந்துத் தலைவர்கள் தங்கள் ஆட்களை வேலைக்கு அனுப்பியதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இதனால் ஏற்பட்ட பயங்கர விளைவுகளிலும், புளியந்தோப்பு ஷெட்யூல் வகுப்பு – சாதி இந்து – முஸ்லீம் கலவரத்தாலும் ஏற்பட்ட விளைவுகளைச்
சமாளித்து ஷெட்யூல் வகுப்பு மக்களை காப்பாற்றிய பெருமையும் இவரையே சார்ந்ததாகும். இவரது தமிழ் அறிவினையும், இலக்கிய, யோக, ஞான
மார்க்கங்களில் இவருக்கிருந்த ஆழ்ந்த புலமையும், வாதத்திறமையும் கண்டு வியந்தவர்களில் வடிவேல் செட்டியார், இலவழகனார், திரு.வி.க, உ.வே.சா,
மறைமலையடிகள் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இறுதி நாட்களில் சமயத்துறையில் சத்குரு அந்து சுவாமிகளின் அடியாராக இருந்தா
__________________
Guru
Guru
Status: Offline
Posts: 9863
Date: Aug 23, 2011
நீதிக்கட்சியின் மறுபக்கம் – 03
ம வெங்கடேசன்
நீதிக்கட்சியில் இருந்தவர்கள் யார் – யார்?
“சூத்திரர்கள்… பிராமணர்களிடம் காட்டும் பகைமையைவிட அதிகமாகத் தீண்டாதவர்களிடம் பகைமை காட்டுகிறார்கள். உண்மையில் இந்து சமூக
சாதி முறையின்மீது தாழ்த்தப்பட்டோர்கள் தொடுக்கும் தாக்குதலை முறியடிக்கும் காவற்படையாகச் செயல்படுகிறவர்கள் சூத்திரர்களே… சூத்திரர்கள்
பிராமணர்களைக் கீழே தள்ள விரும்பினாலும், தாழ்த்தப்பட்டோர்கள் தங்களுடைய நிலைக்கு உயர்ந்து விடுவதை விரும்பவில்லை – இந்தியாவின் ஆட்சி பிரிட்டிஷாரிடம்
இருந்தாலும் நிர்வாகம் (ஆதிக்க சாதி) இந்துக்களால் நடத்தப்பட்டது. நகரம் முதல் கிராமம் வரை (ஆதிக்க சாதி) இந்துக்களின் பிடியில் உள்ளது.”
பேரறிஞர் அம்பேத்கர்
அம்பேத்கர் நூல்தொகுப்பு – 9, பக். 174 – 158.
நீதிக்கட்சியில் இருந்தவர்கள் யார் யார் என்பதைப் பார்த்தாலே அது தாழ்த்தப்பட்டவர்களின் நலனுக்கு – முன்னேற்றத்திற்குத் தொடங்கப்பட்டது அல்ல என்பதை நாம் திட்டவட்டமாகத்
தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தனது அரசியல் ஆட்சியை அந்தக் காலத்தில் விஸ்தரித்து வந்தது கிழக்கிந்திய கம்பெனி. தன் ஆளுகைக்கு உட்பட்ட
பகுதிகளில் நபர்களைப் பொறுக்கி எடுத்து, அந்தப் பகுதிகளில் இருந்த விவசாயிகளிடமிருந்து நிலவரியை வசூலிக்கும்
அதிகாரத்தை அவர்களுக்கு கிழக்கிந்திய கம்பனி அளித்தது. இந்த நபர்கள் தனக்குச் செலுத்த வேண்டிய குறிப்பிட்ட தொகையையும் பிரிட்டிஷ்
சர்க்கார் நிர்ணயித்தது. அதை ஆண்டுதோறும் அவர்கள் செலுத்திவந்தால் போதும். இந்தத் தொகைக்குப் பெயர் ‘‘பேஷ்குஷ்’’.
இங்கனம் நியமிக்கப்பட்டவர்கள் விவசாயிகளிடம் தங்களுக்கு இஷ்டமான அளவு பணமாகவோ அல்லது பொருளாகவோ வசூலித்துக்
கொள்ளலாம். மேலும், விவசாயிகளிடம் நிலத்தை ஒப்படைக்காமல், ஒரு பெரும்பகுதி நிலத்தைச் சொந்த சாகுபடி என்ற
பெயரால் வைத்துக் கொள்ளவும் இவர்களுக்கு அனுமதி உண்டு. இவர்களுக்குப் பெயர் ‘ ஜமீன்தார்’, ‘மிட்டாதார்’, ‘தாலுக்தார்’
என்பவையாகும்.
இந்த உரிமைகளை வைத்துக்கொண்டு அவர்கள் மேலும் மேலும் விவசாயிகளைக் கொடுமைப்படுத்தினர். ‘பேகார் வெட்டி’ என்ற பெயரால்
விவசாயிகள் இந்த ஜமீன்தார் இட்ட வேலையைக் கூலி ஒன்றும் இல்லாமல் செய்தாக வேண்டும். இவ்வித கொடுமைகள் பல
உருவங்களை எடுத்தன.
விவசாயிகள் வீட்டிலிருந்த மாடு முதன் முதலில் போடும் கன்றை ஜமீன்தாரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். ஜமீன்தார் வீட்டில் நடக்கும் திருமணங்கள் முதலிய
சடங்குகளுக்கு விவசாயிகள் பால் முதலியவற்றை இனாமாக வழங்க வேண்டும். காலப்போக்கில் விவசாயி திருமணம் செய்து கொள்ள
வேண்டுமெனில் ஜமீன்தாரின் அனுமதியைப் பெற வேண்டும் என்றெல்லாம் இது விரிவடைந்தது.
இப்படிப்பட்ட வசூல்களுக்கு ஜமீன்தார்கள் குண்டர் படைகளை வைத்திருந்தனர். ஆரம்பத்தில் சர்க்காரின் சார்பாக விவசாயிகளிடத்தில் வரி வசூலிக்கும்
காண்ட்ராக்டர்களாக நியமிக்கப்பட்ட இந்த ஜமீன்தார்கள் காலப்போக்கில் அந்த நிலங்களுக்குச் சொந்தக்காரர்களாகவே கருதப்பட்டார்கள். குடியானவர்களை எந்த சமயத்திலும்
அவர்கள் நிலத்தைவிட்டு வெளியேற்றும் அதிகாரமும் அவர்களிடம் இருந்தது.
ஜமீன்தார்கள் செய்யும் கொடுமைகளுக்கு பிரிட்டிஷ் சர்க்காரின் போலீசும், நிர்வாக இயந்திரமும் உதவி செய்து வந்தன. இந்த
ஜமீன்தார்களும் அவர்களுடைய ஆதரவில் வாழ்ந்தார்கள். தங்களை ஆதரிக்கும் பிரிட்டிஷ் சர்க்காருக்கு விசுவாசிகளாகவும், இந்த சர்க்கார்
வாழையடி வாழையாக இந்த நாட்டில் தொடர்ந்து இருக்க வேண்டும் என விரும்புபவர்களாகவும் இவர்கள் வாழ்ந்தனர். பிரிட்டிஷ்
ஆட்சிக்கு இவர்கள் விசுவாசமாக இருந்ததற்காக இவர்களில் பலருக்கு ‘மகாராஜா’, ‘ராஜா’, ‘நவாப்’ போன்ற பட்டங்கள் பிரிட்டிஷ்
சர்க்காரால் வழங்கப்பட்டன.
இந்த ஜமீன்தார் முறையைத் தவிர ‘ரயத்துவாரி – நிலவரி அமைப்பு’ என்ற முறையும் இருந்து வந்தது. 1803 ஆம் ஆண்டு சென்னை ராஜதானியில்
கவர்னராக இருந்த லார்டு மன்றோ இந்த முறையை ஏற்படுத்தினார். நிலத்திற்குச் சொந்தமான விவசாயிகள் நேரடியாக
சர்க்காருக்கு நிலவரி செலுத்த வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட முறை இது.
ஆனால் நிலம் யாருக்குச் சொந்தம், ஒரு குறிப்பிட்ட நபருக்கு எவ்வளவு நிலம் சொந்தம் என்பதற்கு சர்க்காரிடம்
கணக்கு ஒன்றும் கிடையாது. இதை நிர்ணயிக்கும் அதிகாரம் தாசில்தார்களுக்கு வழங்கப்பட்டது. அந்தத் தாசில்தார்கள் தங்களுக்குப் பணம் (லஞ்சம்) கொடுத்தவர்களுக்கு அவர்கள்
கொடுத்த லஞ்சப் பணத்திற்கேற்ப நில அளவை நிர்ணயித்தார்கள். அதைப் போலவே, கிராமங்களில் இருந்த பல முரடர்களுக்கும், சண்டியர்களுக்கும் பயந்து அவர்கள் தங்களுக்குச்
சொந்தம் எனக் கூறும் இடங்களை அவர்களுக்குச் சொந்தமாக்கிவிட்டார்கள்.
உதாரணமாக, தஞ்சை மாவட்டத்திலிருந்த ஒரு சண்டியர், அந்த ஊர் தாசில்தாரை ஒருநாள் முழுவதும் குதிரை மீது சவாரி செய்யச் சொன்னாராம். அந்தக் குதிரை போகும்
வழி பூராவும் கற்கள் நாட்டப்பட்டு அதற்குட்பட்ட பிரதேசம் பூராவும் அவருக்குச் சொந்தமாக்கப்பட்டதாம்.
இந்த ரயத்துவாரி முறை அமுலாக்கப்பட்ட போது ஆந்திராவில் பெருவாரியாக ஜமீன்தாரிமுறை இருந்து வந்தது. தமிழ்நாட்டில் அனேகமாக எல்லா மாவட்டங்களிலும் – ராமநாதபுரம்
ராஜா, சிவகங்கை ராஜா, மற்றும் சேத்தூர், சாப்டூர் – போன்ற பல இடங்களிலும் ஜமீன்தார்கள்தான் இருந்து வந்தனர். இங்கனம் ஜமீன்தாரி முறை இருந்த போதிலும், தமிழ்நாட்டில்
பெரும்பகுதி ‘ரயத்துவாரி’ முறைக்கே உட்பட்டிருந்தது. இந்த ‘ரயத்துவாரி’ முறைக்கு உட்பட நிலச்சொந்தக்காரர்களுக்கு ‘மிராசுதார்கள்’ என்று பெயர்.
கொஞ்ச நிலம் வைத்துக்கோண்டிருக்கக் கூடிய குடும்பங்கள் மட்டுமே நிலத்தை உழுது சாகுபடி செய்யும். அதிக நிலத்திற்குச் சொந்தக்காரர்கள் ஆகிவிட்ட மிராசுதாரர்கள்
பெரும்பகுதி நிலத்தைக் கட்டு குத்தகைக்கோ அல்லது வார குத்தகைக்கோ விவசாயிகளிடம் விடுவார்கள். அந்த விவசாயிகளுக்கு நிலத்தில் எந்த விதமான உரிமையும் கிடையாது.
நிலச்சொந்தக்காரர்கள் இஷ்டப்பட்ட சமயத்தில் விவசாயிகளை வெளியேற்றி வேறு விவசாயிக்கு அந்த நிலத்தைக் கொடுக்கலாம்.
இப்படிப்பட்ட நிலைமையின் காரணமாக நிலத்தைத் தவிர பிழைப்பதற்கு வேறு தொழில் இல்லாத நிலையில், பாடுபடும் விவசாயிகளிடையே குத்தகைக்கு நிலம் எடுத்துக்கொள்வதற்காக
போட்டி வளர்ந்தது இயல்பு. இதனால் இந்தப் போட்டியில் வெல்வதற்காக ஒரு வேலையும் செய்யாத நிலச் சொந்தக்கார மிராசுதாரர்களுக்கு நிலத்தில் விளைந்ததில் 80.85
விழுக்காடு குத்தகை கொடுக்க வேண்டிய நிலை வந்துவிட்டது.
இதைத் தவிர கொஞ்ச நிலத்திற்குச் சொந்தக்காரர்களாக இருந்து நிலத்தைச் சாகுபடி செய்யும் குடும்பங்கள் கந்து வட்டிக்குக் கடன் வாங்கிக் கடனைத் திருப்பிக்
கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. அந்த நிலங்களைக் கடன் கொடுத்தவர்களே வாங்கிக் கொண்டார்கள். இவ்விதம் இந்த ரயத்துவாரி முறையில் நிலங்கள் சில நபர்கள்
கையில் குவியத் தொடங்கின.
இந்த மிராசுதாரர்களில் பலர் நிலத்தை விவயாயிகளிடம் குத்தகைக்கு விடாமல், கூலிகளை அமர்த்தி சொந்த சாகுபடி என்ற பெயரால் பண்ணைகளை நடத்தி வந்தனர். இந்தப்
பண்ணைகளில் வேலை செய்யும் கூலிகளின் நிலைமையோ படுமோசமானது.
இவ்வாறு அநியாயக் குத்தகை மூலமாக விவசாயிகளையும், அநியாயக் கூலியின் மூலமாக பண்ணைக்கூலிகளையும் கொள்ளையடித்து வந்த அந்தப் பெரு மிராசுதார்கள் பிரிட்டிஷ்
சர்க்காரை நீடூழி வாழ வேண்டும் என்று விரும்பியது இயற்கையே.
இவர்களைத் தவிர பிரிட்டிஷ் கம்பெனிகளுக்காக இங்கே விளைந்த பருத்தி, கடலை போன்ற மூலப்பொருட்களை உள்நாட்டில் வாங்கி ஏற்றுமதிக்காக விற்ற தரகு வியாபாரிகளும் உண்டு.
அதே போன்று பிரிட்டிஷ் கம்பெனிகள் இந்த நாட்டில் விற்பனைக்காக இறக்குமதி செய்த துணி போன்ற பொருட்களை வினியோகம் செய்யும் தரகு வியாபாரிகளும் இருந்தனர். பிரிட்டிஷ்
சர்க்கார் இந்த நாட்டில் என்றென்றைக்கும் நிலைத்து இருக்கவேண்டும் என்றுதானே இவர்கள் விரும்புவார்கள் ?
இப்படி ஆங்கிலேயர்களுடைய பேராசைக்காகவும், தங்களுடைய பேராசைக்காகவும் மற்றவர்களைக் கொடுமைப்படுத்திய ஜமீன்தார்கள், மிட்டாமிராசுதாரர்கள், பண்ணையார்கள், ராஜாக்கள்
தான் நீதிக்கட்சியில் இருந்தனர்.
இந்தக் கட்சியின் தலைவர்களின் பட்டியலைப் பார்த்தாலே இந்த உண்மை தெளிவாகும்.
அன்றைய சென்னை ராஜதானியில் இருந்த ஆந்திரா, ஒரிசா பகுதிகளில் இருந்த அநேகமாக எல்லா ஜமீன்தார்களும் ஜஸ்டிஸ் கட்சியில் இருந்தனர். (தற்சமயம் ஒரிசா மாநிலத்தில்
இருக்கின்ற) கஞ்சாம், கோரக்பூர் மாவட்டங்களில் இருந்த
கல்லிக்கோட் ராஜா,
பர்ஐம்பூர் ராஜா,
பர்லாக்கிமிடி ராஜா,
சின்னக்கிமிடி ராஜா,
ஆந்திரா பகுதியில் இருந்த
பொப்பிராஜா,
பிட்டாபுரம் ராஜா,
செல்லப்பள்ளி ராஜா,
பொப்பிலி ராஜா,
தேபுரேல் ராஜா,
வெங்கிடகிரி ராஜா
போன்ற ஜமீன்தார்கள் ஜஸ்டிஸ் கட்சியில் பிரமுகர்களாக இருந்தனர். இதற்கு விதிவிலக்காக விஜயநகர மகாராஜாவும் நூஜ்வீட் ஜமீன்தாரும் இருந்தனர்.
தமிழ்நாட்டில் ராமநாதபுரம் ராஜா, சிவகங்கை ராஜா, சேத்தூர், சாப்டூர் முதலிய பல ஜமீன்தார்களும் ஜஸ்டிஸ் கட்சியில் இருந்தனர். சில ஜமீன்தார்கள் அரசியலில் பங்கெடுத்துக்
கொள்ளாமல் இருந்தனர்.
இந்த ஜமீன்தார்களைத் தவிர தமிழ்நாட்டில் இருந்த பல பெரிய மிராசுதார்கள் ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்களாக இருந்தனர். உதாரணமாக, தஞ்சை மாவட்டத்தில் இருந்த நெடும்பலம்
சாமியப்ப முதலியார், பன்னீர் செல்வம், மதுரை மாவட்டத்தில் உத்தமபாளையம் பி.டி. ராஜன், பட்டிவீரன்பட்டி டபிள்யூ.பி. சௌந்திர பாண்டிய நாடார், திருநெல்வேலி மாவட்டத்தில்
மேடைதளவாய் முதலியார் போன்றோர்.
இவர்களைத் தவிர சென்னை பி.தியாகராயசெட்டியார், விருதுநகர் வி.வி.ராமசாமி நாடார் போன்ற தரகு வியாபார பிரமுகர்களும் ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்களாக இருந்தனர்.
எனவே, ஜஸ்டிஸ் கட்சியின் தலைமை அன்றைய சென்னை ராஜதானியில் ஆந்திரப் பகுதியிலும் தமிழ்நாட்டுப் பகுதியிலும் இருந்தவர்களால்
ஆனது. தங்களுடைய சுரண்டலுக்கு பிரிட்டிஷ் ஆட்சியைப் பாதுகாவலனாகக் கொண்டிருந்த நிலபிரபுக்களையும், ஆங்கிலக்
கம்பெனிகள் இந்தியாவில் அடித்த கொள்ளையில் பங்கு கொண்ட தரகு வியாபாரிகளையும்
கொண்டதாகவே இந்தத் தலைமை திகழ்ந்தது.
இவர்கள் மட்டுமின்றி சிலோன், பர்மா, மலேசியா, தாய்லாந்து, இந்தோ – சைனா (இன்று வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகளைக்
கொண்டது) போன்ற காலனி நாடுகளில் வட்டிக் கடைகள் வைத்து அநியாய வட்டி வாங்கி கொள்ளையடித்தவர்களும் இந்தக்
கட்சியில் இருந்தனர்.
இவர்களைத் தவிர டாக்டர் டி.எம்.நாயர், டாக்டர் சி.நடேச முதலியார், சர். ராமசாமி முதலியார் போன்ற பிரிட்டிஷ் சர்க்காரின்
செல்லப்பிள்ளைகளும் இந்தக் கட்சியில் இருந்தனர். இவர்களுக்கு ‘சர், திவான், பகதூர், ராவ்பகதூர்’ போன்ற பட்டங்களை பிரிட்டிஷ் சர்க்கார்
அளித்திருந்தது. (ஆதார நூல் : ஆரியமாயையா திராவிட மாயையா? விடுதலைப்போரும் திராவிட இயக்கமும் பக்-14)
இப்படி மக்களை சுரண்டிக் கொள்ளையடித்த கொள்ளைக் கும்பல்களின் மொத்தக் கூட்டமைப்புதான் நீதிக்கட்சி. அன்று கொத்தடிமைகளாக இருந்தவர்கள்
தாழ்த்தப்பட்டவர்கள் தான். அவர்களை முன்னேற விடாமல் அடிமைப்படுத்திச் சுரண்டியே வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தவர்கள் நீதிக் கட்சியினர் தான். இவர்களா தாழ்த்தப்
பட்டவர்களின் முன்னேற்றத்திற்கு என்று நீதிக்கட்சியை ஆரம்பித்தனர் ?
நீதிக்கட்சியைச் சேர்ந்த யாரும் தாழ்த்தப்பட்டவர்களுக்காகப் போராடவில்லை. உண்மையிலேயே தாழ்த்தப்பட்டவர்களுக்காகப் போராடியவர்கள் பற்றி இங்கு சுருக்கமாகப் பார்ப்போம்.
கொங்கு நாட்டு ஆர். வீரையன் (1886-1938)
இவர் 1886ல் கோயம்புத்தூர் குக்கிராமமொன்றில் பிறந்தார். இளமைக் கல்வியை சிக்கலின்றி முடித்தார். புறநகரங்களிலே பொதுப்பணத்தாலும்
அரசாங்கச் சலுகைகளாலும் நடத்தப்படுகிற பள்ளிகள் பழங்குடி மாணவர்களைச் சேர்க்க மறுப்பதையும், தவறிச் சேர்த்துக் கொள்ளப்பட்டால் தனி இடங்களில்
அமர்த்தப்படுவதையும் மிக வன்மையாக கண்டித்தார். இந்த அவலக் கேட்டிலிருந்து விடுபட தெருத்திண்ணைகளிலும், மரத்தடிகளிலும்
சிறு பள்ளிகளை தொடங்கி வைத்து, வன்கொடுமைகளை உடனடியாக அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்து உடனேயே தீர்வு காணுவதில்
முனைப்பாகப் பணியாற்றினார்.
பழங்குடி மக்கள் அஞ்சலகத்திற்குள் செல்லக்கூடாது, பொதுப்பாதையில் நடக்கக்கூடாது என்ற கட்டுத்திட்டங்களை மீறிப் பலரை அழைத்துக்
கொண்டு சென்று பலமுறை விதியோடு விளையாடினார்.
வீதியோரங்களில் வீடமைத்து வாடும் ஏழை எளியோருக்கு உரியவிடத்தில் நிலந்தந்து ஆதரிப்பது ஆளுவோருடைய கடமை என்பதை அன்றைய அரசாங்கத்திற்கு ஓயாமல்
உணரச்செய்தவர். ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை அச்சுறுத்தியும் அடித்தும் கூலி தராமல் வேலை வாங்கும் கொடிய பழக்கத்தை ஆட்சியாளர்
கவனிக்காமலிருக்கும் போக்கினை வன்மையாக கண்டித்து அவற்றிற்குப் பரிகாரம் தேடியவர்.
இவர் 1924ல் சென்னை சட்டமன்ற உறுப்பினராகத் தெரிந்தெடுக்கப்பட்டார். தீண்டாமையால் விளையும் கொடுமைகளை நீக்க சட்டமன்றத்தில்
சிறப்பாகவும், குறிப்பாகவும் பாடுபட்டார். தேர்தல் நேரங்களில் ஊர்ச்சாவடிகளுக்குள் பழங்குடி மக்கள் போக முடியாமை, உயர்த்தப்பட்டோர் பழங்குடி மக்களின்
குடிசைகளை எரிப்பது, கால்நடைகளைக் கொல்வது போன்ற கொடுமைகளை அவ்வப்போது அரசாங்கத்தின் கவனத்திற்குக்
கொண்டுவந்து தீர்வு காணுவார்.
ராவ் பகதூர் வி.ஐ. முனுசாமிப்பிள்ளை (1899-1955)
தாவர உற்பத்தி அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றினார். காலச்சூழ்நிலையால் சமுதாய அரசியல் போன்ற துறைகளில் இறங்கும்
கட்டாயத்திற்குள்ளானார்.
1926லிருந்து 1937வரை அவர் தொடர்ந்து சென்னை மாநில சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவரது நேர்மையான உழைப்பும் உண்மையான தியாகமும்
இவரைப் பல்வேறு அமைப்புகளில் பங்குபெறச் செய்தன. உதகை மாவட்ட ஆட்சியின் தலைவராகவும் மாவட்ட கல்வி வளர்ச்சிக் குழுவின் தலைவராகவும்
செயல்பட்டார். சென்னை பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து ஆறு ஆண்டுகள் உறுப்பினராகவும் பணியாற்றினார். கோவை, நீலகிரி மாவட்டங்களின்
கல்வித்துறைகளின் தலைவராகவும், விவசாய மன்றங்களின் செயலாளராகவும், கூட்டுறவு நிலையங்களில் தலைவராகவும் இருந்திருக்கிறார்.
1933ல் நடைபெற்ற வரலாற்றுப் புகழ்பெற்ற பூனா ஒப்பந்தத்தில் பழங்குடி மக்களின் சார்பாகக் கையெழுத்திட்ட தலைவர்களில் இவரும் ஒருவராவார்.
பழங்குடி மக்கள் உரிமைக்காக, குறிப்பாக அரசியலில் தனி உரிமை பெறுவதிலே இவர் பேரார்வம் காட்டினார். பழங்குடி மக்களின் முன்னேற்றத்திற்கும்,
பொதுவாக நாட்டின் நலனிற்கும் மிகச் சீரிய வகையில் திட்டங்களை தந்துள்ளார்.
முதுபெரும் தலைவரான ஆர். சீனிவாசன் போன்றோர்களோடு இவர் இணைந்து பணியாற்றியுள்ளார். இந்தியா முழுவதிலும் சென்று மாநாடுகளில்
கலந்துகொண்ட, பல்வேறு தொண்டுகளில் ஈடுபட்டு இந்தியா முழுவதும் அறிமுகமான தமிழகத் தலைவர்கள் ஒரு சிலரில் இவரும் ஒருவராவார்.
1938ல் சென்னை மாநில அமைச்சரவையில் விவசாயத்துறை அமைச்சராக சிறந்த முறையில் பணியாற்றியுள்ளார். 1950லிருந்து 1955 வரை நாடாளுமன்ற உறுப்பினராக
சிறப்பாகத் தொண்டாற்றிக் கொண்டிருக்கும்போதே இயற்கை எய்தினார்.
ராவ் சாகேப் எம்.சி. மதுரைப்பிள்ளை (1880 – 1935)
எளிய குடும்பத்தில் பிறந்து உண்மை உழைப்பாலும் நல்ல பண்பாலும் செல்வந்தரானார். ஏழை எளிய பட்டியல் வகுப்பு மக்களின் நலனிலே அதிக
ஆர்வத்தோடு செயல்பட்டு எளிய தொழிலாளர்களின் முன்னேற்றத்தில் தீவிரமாக பங்கேற்று பணியாற்றினார். சென்னையில் பொதுவாக
விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில செல்வந்தர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
1921ல் பக்கிங்ஹாம் கர்நாடிக் தொழிற்சாலையில் கதவடைப்பு ஏற்பட்டது. முதலாளி-தொழிலாளி என்ற வகையில் தீர்க்கப்பட வேண்டிய
பிரச்சினை சாதிச்சண்டையாக உருவெடுத்தது. இதனை புளியந்தோப்புக் கலவரம் என்று குறிப்பிடுவார்கள். இந்த வேலை நிறுத்தத்தினால் துயர வாழ்க்கைக்குப் பலியான
திராவிடர்-ஆதிதிராவிடர் ஆகிய இரு தரப்பினர்களையும் தலைவர் மதுரைப் பிள்ளை சமமாக பாவித்து உணவும், பணமும் கொடுத்து ஆதரவு தந்தார்.
1925ல் இவர் சட்டமன்ற உறுப்பினாராக நியமிக்கப்பட்டார். அங்கும் அவர் தனித்து நின்றே பணியாற்றினார். ஒரு சில சமயங்களில் முதுபெரும் தலைவர்
சீனிவாசனாருடன் இணைந்து பணியாற்றியுள்ளார். பக்தியில் மிகுந்த ஈடுபாடுகொண்ட இவர் அரசியல் அதிகாரமானது பழங்குடி மக்களுக்குக் கிடைக்க
வேண்டும் என்பதில் தணியாத ஆர்வம் கொண்டிருந்தார். தனித்தொகுதி தேர்தல் முறையைவிட கூட்டுத் தொகுதி முறையே சிறந்தது என இவர்
ஆரம்பத்தில் கருதினார்.
சமுதாய நன்மைக்காக, திராவிடர், ஆதிதிராவிடர் ஆகிய இரு தரப்பினரையும் ஒரே மேடையில் பலமுறை கூட்டியிருக்கிறார். ஏழைப் பிள்ளைகள் கல்வி கற்பதற்கு பணம், உடை, இருக்க
இடம் போன்றவைகளைத் தந்து உற்சாகப்படுத்தினார். இவர் நகர மன்ற உறுப்பினராகவும் சில காலம் தொண்டாற்றியுள்ளார்.
பண்டிதமணி ஜி. அப்பாதுரையார் (1890-1962)
இலக்கியத்தில் மூழ்கி புராண இதிகாசங்களில் திளைத்து, வரலாறு உணர்ந்து தருக்க ரீதியில் ஆதாரங்களோடு வாதிட்ட உண்மையான பகுத்தறிவுவாதிகள் தமிழகத்தில்
மிகக்குறைவு. அவர்களில் சிறந்தவர் பண்டிதமணி ஜி. அப்பாதுரையார். அவர் வாதத்தில் அன்றைய காலத்து தூயதமிழ் இணைந்தோடும். கருத்தில் தரம் தெரியும். திறன்
பேசும். அறன் ஒளிரும். சிந்தனையிலே உணர்வு பொங்க, சிந்தையிலே உறக்கத்தை உதறி செயலிலே வீரத்தை காட்டி வாழ்ந்தார் அப்புலவர் பெருமகனார்.
இவர் 1890ல் கொங்கு நாட்டில் பிறந்து கோலாரில் வளர்ந்தார். தமிழ் ஆர்வமும் அறிவும் பெற்று பண்டிதரானார். இளமையிலேயே கழைக்கூத்து, மாந்திரீகம்,
பில்லி, சூனியம் போன்றவைகளில் நாட்டங்கொண்டிருந்தார் என்பார்கள்.
1907ல் இவர் வாழ்க்கையில் பெரும் மாறுதல் ஏற்பட்டது. இதற்கு சென்னை ராயப்பேட்டையிலிருந்து தமிழகத்து முதல் பகுத்தறிவுவாதியான தண்டமிழ்
செல்வன் பண்டித க. அயோத்திதாச தம்ம தாயகா அவர்களால் வெளியிடப்பட்டு வந்த தமிழன் பத்திரிகையும், அயோத்திதாசரின் எண்ணற்ற விளக்க
கூட்டங்களே இம்மாற்றத்திற்குக் காரணமாகும். சமயம், சமுதாயம், இலக்கியம் ஆகிய துறைகளில் வல்லவர்களோடு வாதிட்டு வெற்றிக்
காணுவது இவருக்கு கைவந்த கலையாக இருந்தது.
ஆரம்ப காலத்தில் கிறுத்தவ சமயத்தை ஏற்றிருந்த இவர் 1911ல் தமது 21 வயதில் பௌத்த நெறியை தழுவினார். இதில் மிகவும் ஈடுபாடு கொண்டு இளைஞர் பௌத்த
சங்கத்தை கோலார், வேலூர், சென்னை, செங்கற்பட்டு போன்ற இடங்களில் ஏற்படுத்தினார். சிறுநூல்கள் பல எழுதினார். எண்ணிலடங்கா அரிய
கூட்டங்களை நடத்தினார்.
1912லிருந்து திராவிடன், நவசக்தி, விலாசினி, குடியரசு போன்ற பத்திரிகைகளிலும் சிறப்பாக தமிழன் பத்திரிகையிலும் பல்வேறு வகையான அரிய கட்டுரைகளை எழுதிப்
புகழ்பெற்றார்.
1917ல் மாண்டேகு-செம்ஸ்போர்ட் குழுவினருக்கு சமுதாய நிலையை விளக்கியது, 1924ல் காந்தியடிகளோடு சமுதாயச் சீர்திருத்தத்தைப்
பற்றி வாதிட்டது ஆகியவை இவரது வாழ்வில் குறிப்பிடத்தக்கவை. 1926லிருந்து பள்ளி ஆசிரியராகவும், கோலார் ‘தமிழன்’ பத்திரிகை ஆசிரியராகவும் பணியாற்றினார்.
புத்தர் அருளறம் என்ற நூலினைப் படைத்துள்ளார். 1930லிருந்து 1955 வரை அவர் செய்த தொண்டு மகத்தானதாகும்.
“எங்களுக்கெல்லாம் முன்னரே பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்து மக்களைத் திருத்தியவர் இவர்” என்று அன்னாரது நீத்தார் நினைவு நாளில்
ஈ.வே.ரா பேசியது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
சுவாமி சகஜானந்தர் (1891 -1958)
1891ல் வட ஆற்காடு மாவட்டத்தில் பிறந்தார். சமத்துவக் கொள்கையிலும் தன்னலமற்ற பணியிலும் ஆழ்ந்த பற்றுள்ளவராய் வாழ்ந்தார். தமிழ்
மொழியில் புலமையும், வேதம், வேதாந்தம் மற்றும் பல கலைகளிலும் ஆழ்ந்த பயிற்சியும் பெற்ற பின்னரே அவர் சமுதாய
தொண்டினை மேற்கொண்டார்.
வேதங்களில் கோயில் வழிபாடு பற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், பழங்குடியினர் கோயிலினுள் நுழைவதால் மூர்த்தா அல்லது மூர்த்தியின் புனிதம்
சீரழிந்துவிடும் என்னும் நம்பிக்கையை இகழ்ந்தார். இந்த மூட நம்பிக்கைக்கு வேதங்களில் ஆதாரமில்லை என்றும் எடுத்துக்காட்டினார்.
மேலும் தன் இன மக்களுக்காக பல ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு கோயிலை கட்டினார். சிதம்பரத்தில் நந்தனார் மடத்தை நிறுவி மற்றவர்களைப்போல தாமும்
ஒரு மடத்தை நிறுவ முடியும் என்பதை உறுதிப்படுத்தினார்.
கல்விப்பணி: ஆன்மிகத்தெளிவு பெறவும் ஆத்மா உயர்வு அடையவும் கல்வி இன்றியமையாதது என்பது அவரது கருத்து. வேதம், வேதாந்தம், வரலாறு,
இலக்கியம் ஆகியவற்றில் பொதிந்து கிடக்கும் உண்மைகளை அறியவும் ஆய்வு செய்யவும் கல்வி ஒன்றே துணை செய்யும் என்பதை உணர்த்தினார்.
அறிவையும் பாதுகாப்பையும் எல்லா மக்களுக்கும் கல்வியே பயக்கும் என்பதை எடுத்துக்காட்டினார். குறிப்பாக பழங்குடியினர் முழுமையான கல்வி பெற வேண்டும்
என விரும்பினார். இக்குறிக்கோளோடு 1910ல் அவர் நந்தனார் பள்ளியை நிறுவினார். இன்றும் இப்பள்ளியை திறமையாக
செயல்பட்டு வருகிறது என்பது மகிழ்ச்சிக்குரியதாகும்.
1925ல் சுவாமி அவர்கள் சென்னை மாநில சட்டப்பேரவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கே கருத்து ஒருமித்த பழங்குடிச்சமுதாய மக்களின் மற்ற
தலைவர்களோடு ஒன்று சேர்ந்து அவர் பணியாற்றினார். உணர்ச்சிபொங்கும் அவரது சொற்பொழிவுகள் மற்ற இன மக்களின் உள்ளத்தைக் கூடத்
தட்டி எழுப்பும் ஆற்றல் பெற்றவையாக இருந்தன. பழங்குடி மக்களின் ஆன்மிக உரிமைகளுக்காகவும் அரசியல் முன்னேற்றத்திற்காகவும் அயராது உழைத்தார்.
பி.எம். வேலாயுதபாணி (1896-1962)
பூஞ்சோலை முத்துவீரர் நாவலர் ஈன்றெடுத்த செல்வர் நமது தலைவர் பி.எம்.வேலாயுதபாணி அவர்கள். 12 ஆண்டுகாலம்
தொடர்ந்து மாநகராட்சி உறுப்பினராக இருந்து மக்களுக்கு தொண்டாற்றும் பேறினை பெற்றார். தன் வட்டத்து மக்கள் பிற பகுதி மக்கள் என்ற
பாகுபாடில்லாமல் பொதுவாக மக்கள் சுகாதாரத்தை கண்காணிப்பதோடு, ஆங்காங்கே பள்ளிகளையும், மாணவர் விடுதிகளையும், சத்திரங்களையும் முதியோர்
கல்விக் கூடங்களையும் துவக்கினார்; பிறர் துவக்குவதற்குக் காரணமாகவும் இருந்தார். சமுதாய நலனிற்காகப் பல மன்றங்களைத் தோற்றுவித்ததோடு அவற்றில்
உறுப்பினராக இருந்து செயல்களிலும் ஈடுபட்டார். கௌரவ நீதிபதியாகவும் சிலகாலம் இருந்தார்.
சென்னை மாநில சட்டமன்ற உறுப்பினராக ராணிப்பேட்டை தனித்தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்றத்தில் தமது மூத்த
தலைவர்களோடு பங்குகொண்டு தொண்டாற்றினார்.
நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது பொறுப்பிலிருந்து வழுவாமலும், சமுதாய முன்னேற்றத்தையே குறிக்கோளாகவும்
எண்ணி செயல்பட்டார். திட்டங்கள் தீட்டப்படுகிறதா என்பதைக் காணுவதைவிட தீட்டிய திட்டங்கள் செயலுக்கும் பயனுக்கும் உகந்ததா என்பதைக்
கண்காணிப்பதுதான் இவரது கொள்கையாயிருந்தது. மாநில உணவுக் குழு, மதுவிலக்குக் குழு, மருத்துவமனை திட்ட ஆலோசனைக் குழு போன்றவைகளில் இவர் மிகவும்
பங்கேற்று பல அரிய கருத்துக்களை வழங்கியிருக்கிறார்.
பி. பரமேஸ்வரன் (1909-1957)
பி.ஏ. பட்டதாரியான இவர் முதுபெரும் தலைவர் ஆர்.சீனிவாசன் அவர்களுடைய மகள் வழி பேரனாவார். பெருந்தலைவர் எம்.சி.ராஜா அவர்களின்
செயலாளராக 1935லிருந்து பத்தாண்டு காலத்திற்கு பணிபுரிந்திருக்கிறார். இந்த இளமைப் பருவ சமுதாய, அரசியல் துறைகளில் ஏற்பட்ட
அனுபவங்களோடு இவரை நாடு தெரிந்து கொள்ளுமளவுக்கு இவரது துணிவும் முயற்சியும் பெருந்துணையாய் நின்றன எனலாம்.
தலைவர் என்.சிவராஜ் அவர்களின் தலைமையில் மாமேதை அம்பேத்கர் அவர்களின் கொள்கை வழி நின்று தொண்டாற்ற 1942லிருந்து தன்னை அர்ப்பணித்துக்
கொண்டது இவருக்குள்ள மற்றொரு சிறப்பு. அனைத்து இந்திய செட்யூல் வகுப்பினர் சம்மேளனத்தின் மாவட்ட செயலாளராகத் திறம்படப்
பணியாற்றியுள்ளார். பின்னாளில் அகில இந்திய டிப்ரஸ்ட் கிலாஸஸ் லீகிற்கு துணைத்தலைவராகவும் திறம்பட பணியாற்றியுள்ளார். 1948ல் சென்னை மாநில
பதிவுபெறாத ஷெட்யூல் வகுப்பினர் அரசாங்க ஊழியர் சங்கத்தை ஆரம்பித்து நடத்தினார்.
செங்கற்பட்டு, மதுராந்தகம் தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை மாநகராட்சி உறுப்பினராகவும்
தேர்ந்தெடுக்கப்பட்டு மேயராகவும் பதவி வகித்தார். பதவிக் காலம் முடியுமுன்பு இடையில் சென்னை மாநில அமைச்சரவையில் இவரை சேர்த்துக் கொள்ளத்
தவிர்க்க முடியாத நிலையேற்பட்ட போது மேயர் பதவியிலிருந்து விலகி அமைச்சரானார். இங்கு பல குழுக்களில் பங்கேற்று பழங்குடி மக்களின் வாழ்க்கைக்கு உகந்த
திட்டங்களை அரசாங்கத்திற்கு தந்தார்.
1964ல் இவர் தனது தலைமையில் பழங்குடி மக்களின் முன்னேற்றத்திற்காக கல்வி, விவசாயம், வீட்டுமனை போன்ற பல்வேறு துறைகளில் தனது கருத்தினை அறிக்கையாக
அரசுக்கு சமர்ப்பித்தார்.

நீதிக்கட்சியின் மறுபக்கம்
http://newindian.activeboard.com/t44595205/topic-44595205/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக