வெள்ளி, 11 ஏப்ரல், 2014

நீதிக்கட்சியின் மறுபக்கம் 05 (ம.வெங்கடேசன்)

வகுப்புரிமை ஆணையை நீதிக்கட்சி ஆட்சியின் முக்கிய
சாதனை என்று தம்பட்டம் அடித்துக்
கொள்கின்றனர்.
பார்ப்பனரல்லாத மக்களுக்காக –
குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களுக்காக –
நீதிக்கட்சி ஆட்சி இந்த சாதனையைக்
கொண்டுவந்தது என்று சொல்லிக்
கொள்ளுகிறார்கள். ஆகவே இந்த
வகுப்புரிமை ஆணையை பற்றி சற்று விரிவாகக்
காண்போம்.

பிரிட்டிஷ் பாராளுமன்றம் ஒரு சட்டம் மூலம்
1919ல் மாண்டேகு-
செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களை முன்வைத்தது.
இந்தச் சட்டம் இந்திய அரசுச் சட்டம் [The
Government of India Act 1919] எனப்படுகிறது.
இந்தியாவில்
இரட்டை ஆட்சிமுறையை இது முன்வைத்தது.

அதன்படி நேரடியான அதிகாரம் பிரிட்டிஷ்
அரசின் கையில் இருக்கும். தேர்தலில் வென்ற
இந்தியர்கள் பிரிட்டிஷ் அரசின் நிர்வாகத்தைக்
கவனித்துக் கொள்வர். அவர்கள்
மாகாண அரசுகளை அமைத்துக்
கொள்ளலாம்.
இதுவே இரட்டை ஆட்சி முறை.

இந்த முறையின்படி 1920
மற்றும் 1923ல் நடந்த தேர்தல்களில் ஆங்கில
அரசுக்கு ஆதரவான கட்சியான நீதிக்
கட்சி வென்றது.
1920 டிசம்பர் 17ம் நாள்,
சென்னை மாகாண அரசின் முதல்
அமைச்சரவையாக நீதிக்கட்சி பதவிப்
பொறுப்பை ஏற்றது.
நீதிக்கட்சியைச் சார்ந்த ஓ. தணிகாசலம்
செட்டியார் 5-8-1921
அன்று ஒரு தீர்மானத்தைக்
கொண்டுவந்தார்.

‘‘பிராமண மனுதாரரைவிட
பிராமணரல்லாத மனுதாரர்
குறைவான தகுதியுடையவராக இருப்பினும்
அரசுப் பணிகளின் நியமனத்துக்கு உரிய
குறைந்த பட்சத் தகுதிகளைப்
பெற்றவராக அவர் இருந்தால்
ரூ 100/-க்கும், அதற்கு மேற்பட்டும் மாத
வருமானம் உள்ள பதவிகளில்
பிராமணரல்லாதார்க்கு 66
சதவீதமும் ரூ100/-க்குக் குறைவாக மாத
வருமானம் உள்ள பதவிகளில் 75
சதவீதமும் ஒதுக்கீடு செய்ய
வேண்டும்.’’
என்பதே தணிகாசலம் அவர்களின்
தீர்மானம்.

இத்தீர்மானத்தை வழிமொழிந்த சி.
நடேச முதலியாரின் உரையில் இட
ஒதுக்கீட்டுக்கான தருக்க நியாயத்தைவிட
அரசாங்க ஆதரவுத் தன்மை ததும்பி வழிந்தது.
அது:
“ஐயா, இந்தியாவில் பிரிட்டன்
பேரரசுக்கான அடித்தளம் இடுதலில்
பிரிட்டன் அரசுக்கு பிராமணர்
அல்லாதார்
துணை செய்துள்ளனர்…..பிரிட்டன்
அரசாங்கத்துக்கு ஆபத்து ஏற்படும்
பொழுதெல்லாம் அதைக்
காப்பாற்ற அவர்கள்
விரைந்தோடி வருகின்றனர்.
இந்த மண்ணின்
மக்களின் நலத்தைப்
பாதுகாப்பது அரசாங்கத்தின்
கடமையாகும்.”
(சென்னை மாகாண சட்டமன்ற
நடவடிக்கைகள்,
தொகுப்பு 2,1921,பக்-425)

தணிகாசலத்தின் தீர்மானத்துக்கு சட்ட
உருவம் கொடுப்பதில்
நெருக்கடி ஏற்படுமென்பதை உணர்ந்து இந்த
விவாதத்தில் பங்கேற்ற ஆங்கிலேய
அதிகாரி ஏ. ஆர். கிநாப்
இதிலிருந்து தப்புவிக்க ஒரு வழியைக்
குறிப்பிட்டார்.
1854 இல் வெளியிட்ட வருவாய்த் துறையின்
ஆணையை அரசின் எல்லாத் துறைகளுக்கும்
விரிவுபடுத்தலாம் என்று அவர்
சொன்னதன் அடிப்படையில் இதில்
உள்ள சிக்கல் தீர்க்கப்பட்டு 16-9-1921 முதல்
வகுப்புவாரி அரசு ஆணை வெளியிடப்பட்டது.

அவ்வாணையில் அரையாண்டு காலத்தில்
புதிதாகச் சேர்த்துக் கொள்ளப்பட்ட
ஆட்களின் எண்ணிக்கையைப் பின்வரும்
தலைப்புகளின்
கீழ்வகைப்படுத்தி அரசுக்கு அரையாண்டு விவர
அறிக்கைகளை அனுப்புமாறு கேட்டுக்
கொள்ளப்பட்டது.
1. பிராமணர்கள்
2. பிராமணரல்லாத இந்துக்கள்
3. இந்தியக் கிறிஸ்துவர்கள்
4. முகம்மதியர்கள்
5. ஜரோப்பியர்கள் மற்றும் ஆங்கிலோ-இந்தியர்கள்
6. ஏனையோர்
இவ்வாறு கூறுகிறது அரசு ஆணை எண்-613.
இந்த
வகுப்புரிமை ஆணையை கூர்ந்து கவனிப்பவர்கள்
ஒரு விஷயத்தை தெள்ளத்
தெளிவாகப் புரிந்து கொள்ள
முடியும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர்
ஆகியோரை குறிப்பாக உணர்த்தாமல் ‘ஏனையோர்’
என்ற தலைப்பில் அடைத்துவிட்டு கடைசியில்
தள்ளி விட்டனர்.

இது நீதிக்கட்சி அரசால்
பிறப்பிக்கப்பட்டது எனக் குறிப்பிடுதல்
முழுமையான உண்மையன்று. நீதிக்கட்சியின்
உறுப்பினர்களால்
முன்மொழியப்பட்டும்
வழிமொழியப்பட்டும் ஆங்கிலேய
அதிகாரியால் திருத்தம் செய்யப்பட்டும்
பிராமண உறுப்பினர்கள் உட்பட
அனைவராலும் ஒரு மனதாக ஒப்புக்
கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்ட
அரசாணை. இந்த அரசாணையை,
ஆங்கிலேயரால் நேரடியாக நிர்வகிக்கப்பட்ட
துறை வெளியிட்டது. இது ஒருமை மன
உணர்வுடன் உருவாக்கப்பட்டதாக
தெரிகிறது.
இந்த அரசாணையில் தெளிவாக இன்ன
வகுப்பார்க்கு இவ்வளவு இடங்கள் எனக்
குறிப்படாததால் இதை நிறைவேற்ற இயலவில்லை.
நீதிக்கட்சி அரசு மறுபடியும்
இரண்டாவது வகுப்புரிமை ஆணையை 15-8-1922
ஆண்டு வெளியிட்டது.
(அரசு ஆணை எண்-658).
முதலமைச்சரவையின் பதவிக்காலம் முடிந்தவுடன்
1923 செப்டம்பர் 11ம் நாள் அமைச்சர்கள்
தமது பதவிப்
பொறுப்புகளிலிருந்து விலகிக்
கொண்டனர்.

இந்த இரண்டாவது வகுப்புரிமை ஆணையும்
சட்டமாகவில்லை என்பதை கீழ்க்கண்ட
செய்தியிலிருந்து நாம்
தெரிந்து கொள்ளலாம்.
3-12-1950 அன்று திருச்சியில் நடைபெற்ற
வகுப்புவாரி உரிமை மாநாட்டில் எஸ்.
முத்தையா முதலியார் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
நீதிக்கட்சி பதவிக்கு வந்ததும்
சட்டசபையிலேயே வகுப்புவாரிப்
பிரநிதித்துவக் கோரிக்கையை ஆதரித்துத்
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேற்படி தீர்மானம் 1920ம்
ஆண்டிலேயே நிறைவேற்றம்
ஆகியது என்றாலும், 1928
வரை அதை சட்டமாகக்
கொண்டுவர முடியாமல்தான்
இருந்தது.

நூல்:
நீதிக்கட்சி அரசு பாடுபட்டது யாருக்காக?

இரட்டையாட்சி முறையின்படி, 1926 நவம்பர் 8ம்
நாளன்று சட்டமன்றத்திற்கான
மூன்றாவது பொதுத் தேர்தல்
நடைபெற்றது.
அந்தத் தேர்தலில் சுயராஜ்ஜியக் கட்சியினர் 41
இடங்களையும், நீதிக்கட்சியினர் 21 இடங்களையும்,
சுயேச்சைகள் 36 இடங்களையும் கைப்பற்றினர்.
அத்தேர்தலில் போட்டியிட்ட எந்தக் கட்சிக்கும்
ஆட்சியை அமைக்கக் கூடிய
பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை.

எந்த
ஒரு அரசியல்
கட்சியும்
ஆட்சி அமைக்க
முன்வரமுடியாத
நிலையில்,
ஆளுநர்
கோஷன்,
அரசின்
நியமன
உறுப்பினர்களான
34
பேர்களுடைய
ஆதரவைத்
தருவதாக
வாக்குறுதி தந்து,
சுயேச்சையாக
வெற்றிபெற்று வந்திருந்த
டாக்டர் பி.சுப்புராயன்
அவர்களை அழைத்து அமைச்சரவையை அமைக்குமாறு கேட்டுக்கொண்டார்.
டாக்டர் சுப்புராயன் அவர்கள்
சுயேச்சை உறுப்பினர்கள் சிலரின் ஒத்துழைப்போடும்,
ஆளுநர் அளித்த வாக்குறுதியோடும்
அமைச்சரவையை அமைக்க இசைந்தார்.
தம்மை முதலமைச்சராகவும் சுயராஜ்ஜியக்
கட்சியினரான ஏ.அரங்கநாத முதலியார்,
ஆர்.என்.ஆரோக்கியசாமி முதலியார்
இருவரையும் அமைச்சர்களாகவும்
கொண்ட அமைச்சரவையை அமைத்து ஆட்சிப்
பொறுப்பை 4-12-1926ல் ஏற்றார்.
ஒரு சிறுபான்மை உடைய அமைச்சரவை, ஆளுநர்
ஆதரவோடும் நியமன உறுப்பினர்களின்
ஆதரவோடும் ஆட்சி புரிந்து வருதலை நீதிக்கட்சியின்
தலைவர்கள் விரும்பவில்லை. புதிய அமைச்சரவையின்
நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்
வகையிலேயே பணியாற்றி வந்தனர்.
இருமுறை நம்பிக்கை இல்லாத்
தீர்மானங்களை இயற்றினர்.

சுயராஜ்ஜிய கட்சியைச் சேர்ந்த
சுவாமி வெங்கடாசலம்
செட்டி 1927ம் ஆண்டு ஆகஸ்ட்
23வது நாள் டாக்டர். சுப்புராயன்
அமைச்சரவை மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்
கொண்டு வந்தார்.
நீதிக்கட்சியைச் சேர்ந்த திரு. பி. இராமச்சந்திர
ரெட்டியும், திரு. எம். கிருஷ்ண நாயரும்
ஆட்சியில் ஊழல்கள் மலிந்துவிட்டன என்றும்
அமைச்சரவையானது நிர்வாகத்
திறமையில்லாமல் செயல்படுகிறது என்றும்
கூறி, அமைச்சரவையை ஆட்சியிலிருந்து அகற்ற
வேண்டிய இன்றியமையாத
நிலை ஏற்பட்டுவிட்டது என்றும் வாதிட்டனர்.
அத்தீர்மானம் தோல்வி அடைந்தது.
பாராளுமன்ற சனநாயக முறையில்
நேரடியாகப் பதவிகளை அனுபவிக்கும் அரசியல்
நோக்கம் கொண்ட நீதிக்கட்சியினர்,
தமக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என தனிப்பட்ட
நலன் கருதி எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனா, ஈவேரா டாக்டர்
சுப்பராயனை ஆதரித்தார். ஏனெனில்,
டாக்டர் சுப்பராயன் ஆளும் கட்சியினர்.
அத்தோடு ஆங்கிலேயரால் ஆட்சிக்குக்
கொண்டு வரப்பட்டவர். ஆளும்
கட்சியினர் எவராயினும்
அவரை ஒப்புக்கொண்டு மறைமுகமாகப்
பதவிகளைப் பயன்படுத்தும் நோக்கம்
கொண்டவர் ஈவேரா. அதனால்,
அவர் டாக்டர் சுப்பராயனை ஆதரித்தார்.
பார்ப்பனரின் ஆதிக்கம் உள்ள
சுயராஜ்ஜியக் கட்சியினர் ஆட்சிக்கு வராமல்
பார்ப்பனரல்லாத சுப்பராயனின்
கட்சியை ஆளுங்கட்சியாக
ஆக்கியமைக்கு ஆதரவு தெரிவிப்பதில்
பார்ப்பனரல்லாதாரின் நலன்கள்
உள்ளது என்று கூறினார்.
முன்னாள் நீதிக்கட்சி உறுப்பினரும், பனகல்
அரசரின் செயலரும், பார்ப்பனர்
அல்லாதாருமான டாக்டர் சுப்பராயனின்
அமைச்சரவை பார்ப்பனர் அல்லாத
அமைச்சர்களைக் கொண்ட
அமைச்சரவை எனக் கூறி ஆளுநரின் செயலில்
பாராளுமன்ற சனநாயக
உணர்வு இருப்பதாகப் போற்றினார் ஈவேரா.
(குடி அரசு 9-1-27).

இந்த வேறுபாட்டின்
காரணமாகவே சுப்பராயன்
அமைச்சரவை மீது நீதிக்கட்சியினர்
கொணர்ந்த
இரண்டு நம்பிக்கை இல்லாத்
தீர்மானங்களையும் ஈவேரா எதிர்த்தார்
(குடியரசு 29-3-27) மற்றும் (30-8-27).

இரண்டு தடவைகளிலும் காங்கிரசு மற்றும்
சுயராஜ்ஜியக் கட்சிகளின் மறைமுக ஆதரவுடன்
டாக்டர். சுப்பராயன் தலைமையிலான
அமைச்சரவை தப்பியது.
ஒத்த நோக்கங்களைக் கொண்ட
காங்கிரசு கட்சியுடன் இணைவதாக
நீதிக்கட்சி தலைவர்கள் 1927 ஏப்ரலில்
அறிவித்தனர். இதன்பின் கூடிய
சிறப்பு மாநாட்டில் (கோவை 2-7-1927)
நீதிக்கட்சி உறுப்பினர்கள் காங்கிரசில் சேர
இசைவளிக்கும் தீர்மானம்
கொணரப்பட்டது.
கோவை ஆர்.கே.சண்முகம் செட்டியார்,
ஜே.எஸ்.கண்ணப்பர் இதை ஆதரித்தனர்.
ஆனால், ஆங்கில அரசிற்கு சாதகம்
இல்லாத இந்தத்
தீர்மானத்தை ஈவேரா எதிர்த்தார்.
பிரிட்டிஷ் அரசு 1927 நவம்பர் 8ம்
நாளன்று ஜான் சைமன் தலைமையில்
ஆய்வுக்குழு அமைத்தது.
இரட்டையாட்சியின்
பயன்களை இதுவரை அனுபவித்த
நீதிக்கட்சி இப்பொழுது பதவியில்
இல்லாத
பொழுது ‘இரட்டையாட்சி இருக்கும்
வரையில் இனிமேல் பதவிக்கு வர
விரும்பவில்லை’ எனக் கோவை மாநாட்டில்
தீர்மானித்தது. மேலும் ‘இந்தியர் எவரும்
இல்லாததால் சைமன் ஆணைக்குழுவுடன்
எவ்விதக் கூட்டுறவும் வைத்துக்
கொள்வதில்லை’ எனவும்
தீர்மானிக்கப்பட்டது.
ஈவேரா, சைமன் ஆணைக்குழுவை வரவேற்றார்.
பொதுமக்களை ஏமாற்றும்
காங்கிரசார் முயற்சியில் நீதிக்கட்சியினர்
சிக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தினார்.
(குடியரசு 20-11-27)

சி.பி.ராமசாமி அய்யரை மீண்டும் சட்ட
அமைச்சராக மறுநியமனம் செய்த
ஆளுநரைக் கண்டித்தும், ஆளுநரைப்
பதவியிலிருந்து விடுவிக்கவும் கோரும் ஈவேராவின்
தீர்மானம் நீதிக்கட்சித் தலைவர்கள்
வேண்டுகோளின் பேரில் கைவிடப்பட்டது.
கோவை மாநாடு முடிந்தபின் அதன்
தீர்மானங்களுக்காகத் தம்மிடம் பனகல்
அரசர் மன்னிப்புக் கேட்டுக்
கொண்டார் என ஆளுநர் வைசிராய்
இர்வினுக்கு எழுதிய கடிதத்தில்
குறிப்பிட்டுள்ளார்.
சென்னை சட்டமன்றத்தில்
சைமன்குழு நியமனம் பற்றிய
பிரச்சினை விவாதத்திற்கு கொண்டு வரப்பட்டது.
முதலமைச்சர் டாக்டர் பி.சுப்புராயன்
தீர்மானத்தை எதிர்த்து சைமன்
குழுவிற்கு ஆதரவாக வாக்களித்தார்.
ஆனால் அவரது அமைச்சரவையிலிருந்த
அமைச்சர்கள் ஏ.அரங்கநாத முதலியார்,
ஆர்.என்.ஆரோக்கியசாமி முதலியார் இருவரும்
சைமன் குழுவிற்கு எதிராக வாக்களித்தனர்.
அமைச்சரவைக்குள்ளேயே கருத்து வேறுபாடுகள்
ஏற்பட்டுவிட்ட நிலையை உணர்ந்த டாக்டர்
பி.சுப்புராயன் அவர்கள், தமது முதலமைச்சர்
பதவியிலிருந்து விலகிக் கொள்ளத்
தீர்மானித்து பதவி விலகல்
கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்தார்.
அதன் காரணமாக மற்ற இரு அமைச்சர்களும்
பதவிகளை தாமாகவே இழக்கும்படியான
சூழ்நிலை ஏற்பட்டது.
ஆளுநர் கோஷன், டாக்டர் பி.சுப்புராயன்
அவர்களின் அமைச்சரவையைப் புதுப்பிக்கக் கருதி,
நீதிக்கட்சியின் தலைவரான பனகல் அரசரின்
உதவியை நாடினார்.

நீதிக்கட்சியினர்க்கு மனநிறைவு ஏற்பட வேண்டி,
நீதிக்கட்சியைச் சேர்ந்த திரு.எம்.கிருஷ்ண
நாயரை நிர்வாக ஆலோசனை அவையின் சட்ட
உறுப்பினராக ஆளுநர் நியமித்தார்.
இரட்டையாட்சி இருக்கும் வரையில்
பதவியேற்பதில்லை என்று நீதிக்கட்சி தீர்மானம்
இயற்றிய பின்னர்
இது நடந்தது என்பதை நினைவூட்டிக்
கொள்ள வேண்டும்.
அதன்பின்தான் பனகல் அரசர்
ஒத்துழைப்பை அளிக்க முன்வந்தார்.
திரு.எஸ்.முத்தையா முதலியார்,
திரு.எம்.ஆர்.சேதுரத்தினம் அய்யர் ஆகிய
இருவரையும் சுயராஜ்ஜியக் கட்சியிலிருந்து பிரித்து,
டாக்டர் பி.சுப்புராயன் அமைச்சரவையில்
இரு அமைச்சர்களாகப் பொறுப்பேற்க
வைத்தார் பனகல் அரசர். அதோடு அந்த
அரசிற்கு நீதிக்கட்சியின் ஆதரவை அளிக்க
முன்வந்தார்.
(மணத்தட்டை சேதுரத்தின அய்யர், ஒரு பிராமண
மிராசுதார்; சுயராஜ்ஜியக் கட்சியின் வட்டக்
கழகத்தின் தலைவராகவும், மாவட்டக்
கழகத்தின் துணைத் தலைவராகவும் இருந்தவர்.)
இந்த அமைச்சரவை 1928 மார்ச் 16ம் நாள்
பதவி ஏற்றுக்கொண்டது.
சுயராஜ்ஜியக்
கட்சியிலிருந்து பிரித்து அழைத்து வரப்பட்ட
எஸ்.முத்தையா முதலியார்
கொண்டுவந்ததுதான்
மூன்றாவது வகுப்புரிமை ஆணை.
15-12-1928ம்
ஆண்டு இவ்வாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த
ஆணை கீழ்வருமாறு குறிப்பிட்டது:-
(அ) ஒவ்வொரு வகுப்பாரிலும்
தகுதியும் தக்கவராகவும் உள்ள
வேட்பாளர்களிடமிருந்து அலுவலர்களை நியமனம்
செய்யப்படுவது. ஒவ்வொரு 12
பணியிடங்களில்
ஒவ்வொரு வகுப்பாருக்கும்
பின்வருமாறு விகிதாச்சார நியமனமாக
இருக்க வேண்டும்:
பிராமணரல்லாதார் (இந்து) ….. 5
பிராமணர்கள் ….. 2
முகம்மதியர்கள் ….. 2
ஆங்கிலோ-இந்தியர் மற்றும் கிறிஸ்தவர்கள்
(ஜரோப்பியர் உள்பட) ….. 2
ஏனையோர் ….. 1
(ஆ) இத்தகைய நியமனங்கள் பின்வரும்
வரிசைப்படி செய்யப்பட வேண்டும்.
1. பிராமணரல்லாதார் (இந்து)
2. முகம்மதியர்
3. பிராமணரல்லாதார் (இந்து)
4. ஆங்கிலோ-இந்தியர் அல்லது கிறிஸ்தவர்கள்
5. பிராமணர்
6. பிராமணரல்லாதார் (இந்து)
7. ஏனையோர்
8. பிராமணரல்லாதார் (இந்து)
9. முகம்மதியர்
10. பிராமணரல்லாதார் (இந்து)
11. ஆங்கிலோ-இந்தியர் அல்லது கிறிஸ்தவர்கள்
12. பிராமணர்
திரு.எஸ். முத்தையா முதலியார்
கொண்டுவந்த இந்த
ஆணை முதன்முதலாக
இன்னின்னார்க்கு இத்தனை இடங்கள்
என்று வரையறை செய்தது.
இந்த ஆணையிலும்
தாழ்த்தப்பட்டோரை ஒரு வகுப்பாக
கொள்ளாமல் ‘ஏனையோர்’ என்ற
பெயரில்
அடைத்து வைத்து ஒரே ஒரு இடத்தை அளித்தனர்.
தாழ்த்தப்பட்ட வகுப்பாருக்கு மிகக் குறைந்த
முன்னுரிமையையே அளித்திருப்பதை பார்க்கும்போது தாழ்த்தப்பட்டவர்களுக்கா இந்த
வகுப்புரிமை ஆணைகள்? என்ற கேள்விதான்
எழுகிறது.
அன்றிருந்த சென்னை மாகாணத்தில்
பிராமணர்களைவிட, முகம்மதியர்களைவிட,
கிறிஸ்தவர்களைவிட தாழ்த்தப்பட்டோர், மக்கள்
தொகையில் அதிகமாக இருந்தனர்.
ஆனால் பிராமணர், முகம்மதியர், கிறிஸ்தவர்
ஆகியோர்க்கு இரண்டு இடங்களை தந்துவிட்டு மக்கள்
தொகையில் பெருவாரியான
எண்ணிக்கையில் இருந்த
தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒரே ஒரு இடம்
கொடுத்ததானது தாழ்த்தப்பட்டவர்களின்
உரிமையை குழிதோண்டிப் புதைத்ததாகத்
தானே அர்த்தம்? இதுதான் சமூக நீதியா?
நீதிக்கட்சி கொண்டுவந்த
வகுப்புரிமை ஆணை தாழ்த்தப்பட்டவர்களுக்கு சமூக
நீதியல்ல, சமூக அநீதி.

நீதிக்கட்சியின் மறுபக்கம் 04 (ம.வெங்கடேசன் )

தற்காலம், பிராமணர்கள்
என்று பெயர் வைத்துள்ள
வகுப்பாருள்
கீழ்ச்சாதி மேற்சாதியென்னும்
வரம்புகளை ஏற்படுத்தி இருக்கின்றார்கள்.

அவ்வரம்புக்குள் அடங்கி சாதிபேதம்
வைத்துள்ளவர்கள் யாவரும் பிராமணக்
கூட்டத்தோர்களையே சேர்ந்தவர்களாகும்.
சைவம், வைணவம்,
வேதாந்தமென்னும் சமயங்களையும்
அப்பிராமணரென்போர்களே ஏற்படுத்தியுள்ளதால்,
அச்சமயங்களை, எவரெவர்
தழுவி நிற்கின்றனரோ அவர்களும்
பிராமணச் சார்புடையவர்களேயாவர்.

இத்தகையச் செயலுள்
சாதி ஆசாரங்களையும், சமய
ஆசாரங்களையும் தழுவிக்
கொண்டே (நான்-பிராமிண்ஸ்)
என்ற சங்கங்கள் கூடியிருக்கிறன்றனரா?
அன்றேல் சாதியாசாரங்களையும் சமய
ஆசாரங்களையும் ஒழித்து (நான்-
பிராமிண்ஸ்) என்ற சங்கங்கள்
கூடியிருக்கின்றனரா என்பது விளங்கவில்லை.

அங்கனம் சாதியாசாரங்களையும்,
சமயவாசாரங்களையும் ஒழித்துள்ளக்
கூட்டமாயிருக்குமாயின் அவர்களுடன்
சேர்ந்துழைப்பதற்கு அனந்தம் பெயர்
காத்திருக்கின்றார்கள். பிராமணர்
என்போரால் வகுத்துள்ள
சாதி ஆசாரங்களையும் சமய
ஆசாரங்களையும் வைத்துக்
கொண்டு (நான்-பிராமிண்ஸ்)
எனக்கூறுவது வீணேயாகும்.
‘‘15-9-1909, தமிழன்’’ பத்திரிகை ஆசிரியர்
பண்டிதர் க.அயோத்திதாசர்

தாழ்த்தப்பட்ட தலைவர்களில் சிலர் ஈவேரா,
நீதிக்கட்சி ஆகியவற்றுடன்
தொடர்பு வைத்திருந்தனர். ஆனால்,
அதில் கலந்துவிடவில்லை. எதிரிக்கு எதிரி நண்பன்
என்ற முறையிலேயே அந்தத்
தொடர்பு இருந்தது. அப்போதும் கூட
ஈவேரா, நீதிக்கட்சி ஆகியவற்றை பல நேரங்களில்
தாழ்த்தப்பட்ட தலைவர்கள்
விமர்சித்தே வந்திருக்கின்றனர்.

ஏனெனில், உயர்த்தப்பட்ட
சாதியினரான நீதிக்கட்சியினர்
தங்களது சொந்த சாதியினரின்
உயர்வுக்காக மட்டுமே உழைத்தவர்கள்.
அவர்களுக்குத் தாழ்த்தப்பட்டோரைப்
பற்றி எஞ்ஞான்றும் கவலை இருந்ததேயில்லை.
இதை மறந்து விடக் கூடாது.
தாழ்த்தப்பட்டவர்களுக்காகத்
தாழ்த்தப்பட்டோரே வாதாடினார்கள்,
போராடினார்கள், தியாகம் புரிந்தார்கள்.
அதனால் தாழ்த்தப்பட்டோர் பெற்ற
உரிமைகள் ஏராளம்….ஏராளம். இதைத்
தாழ்த்தப்பட்ட தலைவர்களின் வாழ்நாட்
குறிப்புகளைப் படிக்கும்போது நாம்
உணர்ந்துகொள்ளலாம். இந்த
குறிப்புகள் அன்பு பொன்னோவியம்
அவர்கள் எழுதிய ‘மக்களுக்கு உழைத்த
பெருமக்கள்’ என்ற நூலில்
தெளிவாக உள்ளன.

ஆனால், தாழ்த்தப்பட்டவர்களின்
முன்னேற்றத்தையும், உரிமையையும்
மட்டுமே குறிக்கோளாய்
கொண்டு நீதிக்கட்சி தோன்றியது என
திராவிட இயக்க எழுத்தாளர்கள்
எழுதி வருகின்றனர். ஆனால் உண்மை என்ன?

நீதிக்கட்சி ஆரம்பித்ததின் வரலாற்றுப்
பின்னணியைப் பார்ப்போம்.
அரசாங்க உத்தியோகங்களில் பிராமணர்கள்
ஆதிக்கம் செலுத்துகின்றனர், அதனால்
மற்றவர்களையும் ஊக்குவிக்க வேண்டும்
என்று பிரிட்டிஷ் அரசு 1851ஆம்
ஆண்டு முதலே கூற ஆரம்பித்தது.

அதன் பின்னர் உத்தியோகங்களைத்
தங்களது உறவினர்களுக்கே பிராமணர்கள்
வழங்குகிறார்கள்
என்று கலெக்டர்களுக்கு புகார்கள்
வந்தன. இதனால் பெரும்
சலசலப்பு ஏற்பட்டு அந்த
ஆண்டு வருவாய்த்துறை வாரியம்
ஒரு உத்தரவினை வெளியிட்டது.
கீழ்நிலை உத்தியோகங்களை ஒரு சில
செல்வாக்குள்ள குடும்பங்கள்
ஏகபோகமாக்கிக்
கொள்ளக்கூடாது என்றும்,
அனைத்து உத்தியோகங்களையும் அந்தந்த
மாவட்டங்களில் உள்ள முக்கிய
சாதியினருக்குப் பகிர்ந்தளிக்க முயற்சிக்க
வேண்டுமென்றும், தாசில்தார்
பதவிகளில் ஒரு விகிதாச்சாரம்
பிராமணரல்லாத சாதியினருக்கு அளிக்க
வேண்டும் என்றும் கலெக்டர்
அலுவலகத்தில் ஹுசூர் சிரஸ்தேதார்,
இங்கிலீஷ் ஹெட்கிளார்க் என்ற
இரு பிரதான வருவாய் அதிகாரிகள்
ஒரே சாதியைச் சேர்ந்தவர்களாக
இருக்கக்கூடாதென்றும் அந்த
உத்தரவு கூறியது.
ஆனால், இந்த உத்தரவை அதைப் பிறப்பித்த
அரசே பின்பற்றவில்லை. இது ஏன்
என்பது ஆராயத் தக்கது.
ஆனால், 1871ஆம் ஆண்டு மக்கள்
தொகைக் கணக்கெடுப்பில்
கீழ்க்கண்டவாறு எழுதப்பட்டது.
‘அரசுப் பதவிகளில்
அவர்களது (பிராமணர்களது) எண்ணிக்கையைக்
குறைப்பதும், அதிக
அளவு இந்து பிராமணரல்லாதாரையும்,
முஸ்லீம்களையும் அரசு உத்தியோகங்களில்
ஊக்குவிப்பதும், அதன் விளைவாக எந்த
ஒரு குறிப்பிட்ட சாதியும் மற்றவர்களைவிட அதிக
முக்கியத்துவமோ அல்லது அதிக எண்ணிகைப்
பலமோ பெற்றுவிட அனுமதிக்காமல்
இருப்பதும்தான் அரசின் உண்மையான
கொள்கையாக இருக்க வேண்டும்’
நாட்டு நிர்வாகம் சம்பந்தப்பட்ட
உத்தியோகங்களில் எந்த ஒரு சாதியும் ஏகபோகம்
வகிப்பதைத் தவிர்ப்பதற்கு, அரசு தனிச்சலுகைகள்
வழங்க வேண்டும் என்று மக்கள்
தொகைக் கணிப்புக்
கண்காணிப்பாளர் கார்னிஷ்
குறிப்பிட்டிருந்தார்.

நீதிக்கட்சி தோன்றுவதற்கு 45
ஆண்டுகளுக்கு முன்பே இந்தக்
கருத்து உதயமானது குறிப்பிடத்தக்கது.
வாய்ப்பு இல்லாதவர்களுக்கு வாய்ப்புத்
தந்து அவர்களைக் கைதூக்கிவிடவேண்டும் என்ற
ஆங்கிலேயரின் சமநோக்கு மட்டும்
இதற்கு காரணம் இல்லை. ஒரு சாராரின்
ஆதிக்கம் பெருகிவிட்டால் அது அன்னியர்
ஆட்சிக்கு எதிரான சதிக்கு இடம்
கொடுத்துவிடும் என்கிற
அச்சமே அப்போது ஆங்கிலேயரிடம் மேலோங்கியிருந்தது.
(திராவிட இயக்க வரலாறு,
தொகுதி-1,
முரசொலிமாறன்)

பிராமணரல்லாதாரின் மனதில்
ஆங்கிலேயர் போட்ட இந்த தூபம் தான்
பின்னாளில் நீதிக்கட்சியாக
உருவெடுத்தது.
தாங்கள் பிராமணரல்லாதாராய்
இருந்த ஒரே காரணத்தால், வேலையில்
புறக்கணிக்கப்பட்டு, வேலை உயர்வு போன்ற
நியாயமாகக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள்
மறுக்கப்பட்டதை உணர்ந்து அரசு ஊழியர்கள்
சிலர் மெட்ராஸ் யுனைடெட் லீக்
என்னும் அமைப்பை 1912ஆம் ஆண்டில்
உருவாக்கினர். இந்த அமைப்பிற்கு டாக்டர் சி.
நடேசன் முதலியார் வழிகாட்டியாக
விளங்கினார்.

இந்த இயக்கம் அமைவதற்குப்
பாடுபட்டவர்களாகக் குறிப்பிடப்படுபவர்கள்:
சரவணபிள்ளை (பின்னால் தஞ்சையில்
டெபுடி கலெக்டர் ஆனவர்)
ஜி. வீராசாமி நாயுடு
துரைசாமி முதலியார் (பொறியியல்
துறையைச் சார்ந்தவர்)
எஸ்.நாராயணசாமி நாயுடு (வருவாய்
வாரியத்தின் ஷெரீப்பாகப்
பணியாற்றியவர்)
தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிமைகள் வாங்கித்
தருவதற்காக இந்த அமைப்பை இவர்களில்
யாருமே துவங்கவில்லை என்பதை கவனத்தில்
கொள்ள வேண்டும்.
உத்தியோகத்துறையிலும் பதவி உயர்விலும்
தாங்களும், தங்களுக்கு இணையான மற்ற
உயர்த்தப்பட்ட சாதியாரும்
புறக்கணிக்கப்படுவதை எதிர்க்கவே இந்த
அமைப்பை உருவாக்கினர்.

1913ஆம் ஆண்டு. டாக்டர் நடேச முதலியாரின்
மருத்துவமனையில் உள்ள தோட்டத்தில்
மெட்ராஸ் யுனைடெட் லீக்கின்
முதலாவது ஆண்டு நிறைவு விழா நடந்தது.
அப்போது அதனுடைய பெயரைத் ‘திராவிடர்
சங்கம்’ என்று மாற்ற ஒருமனதாகத்
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெயர் மாற்றப்பட்ட திராவிடர் சங்கமும்
தாழ்த்தப்பட்டவர்களுக்கு நன்மை எதுவும்
செய்ததாகக் குறிப்புகள் கிடைக்கவில்லை.
சென்னை திராவிடர் சங்கத்தின் சார்பில்
1915ல் வெளியிடப்பட்ட
பிராமணரல்லாதோர் கடிதங்கள் ரெட்டி,
நாயுடு, வேளாளர் ஆகியோருக்கான
ஒருங்கிணைவை முதலில் குறிப்பிட்டது.
(சுயமரியாதை இயக்கமும்
பொதுவுடைமையும், கோ.கேசவன்)
1916ம் ஆண்டு டாக்டர் நடேச முதலியார்
திராவிட சங்க விடுதி என்ற விடுதி ஒன்றைத்
துவக்கினார்.

திருவல்லிக்கேணி அக்பர் சாகிப்
தெருவில் உள்ள ஒரு பெரிய
கட்டிடத்தில் பிராமணரல்லாத
மாணவர்களுக்கென்று பிரத்யேகமாக
அந்த விடுதி செயல்படத் துவங்கியது.
இவ்விடுதியும் தாழ்த்தப்பட்டவர்களின்
முன்னேற்றத்தைக் கருதி ஆரம்பிக்கப்பட்டதல்ல.
பிராமணரல்லாத மற்ற உயர்
சாதி மாணவர்களின் முன்னேற்றத்தைக்
கருத்தில்கொண்டே ஆரம்பிக்கப்பட்டது.
நீதிக்கட்சியை ஆரம்பித்தவர்களில்
முக்கியமானவர்களாகக் கருதப்படுபவர்கள்
டி.எம்.நாயர் மற்றும் சர்.பி.டி.தியாகராய
செட்டியார் ஆகியோர்.

நீதிக்கட்சியை இவர்கள் ஆரம்பித்த
கதை ரசிக்கும்படியானது. முக்கியமானதும் கூட.
டி.எம்.நாயர் கட்சி ஆரம்பித்த கதை:
டி.எம்.நாயர்
நீதிக்கட்சியை ஆரம்பிப்பதற்கு முன்பு காங்கிரசில்
இருந்தார். 1907ஆம்
ஆண்டில் சித்தூர் நகரில்
நடைபெற்ற
வடஆற்காடு மாவட்ட
காங்கிரஸ்
மகாநாட்டில்
தலைமை வகித்தார்.
1904ஆம் ஆண்டு பிராமணர்கள் அதிகம்
வாழக் கூடிய திருவல்லிக்கேணித்
தொகுதியிலிருந்து அவர்
சென்னை மாநகராட்சிக்குத்
தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னரும்
தொடர்ந்து மும்முறை அந்தத்
தொகுதியில்
தேர்ந்தெடுக்கப்பட்டார். 1916ம்
ஆண்டு அதே தொகுதியில் இந்திய
சட்டசபைக்குப் போட்டியிட்ட பொழுது அவர்
தோற்றார். தாம் தோற்றதற்கு அங்கு வாழும்
பிராமணர்களே காரணம் என்ற புதுமையான
(?) முடிவுக்கு அவர் வந்தார். இந்தத்
தோல்வியானது அவரை பிராமணரல்லாத
இயக்கத்தை உருவாக்க வேண்டும் என்ற
எண்ணத்தை உருவாக்கியது.

சர்.பி.டி.தியாகராய செட்டியார்
கட்சி ஆரம்பித்த கதை:
வெள்ளுடை வேந்தர் என்று அழைக்கப்படும்
சர்.பி.டி.தியாகராய செட்டியார்
நீதிக்கட்சியைத் தொடங்குவதற்கு முன்
காங்கிரசிலேதான் இருந்தார்.
ஒருமுறை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில்
கும்பாபிஷேகத்திற்கு மற்றெல்லாரையும்
விட அதிகத் தொகையாகிய ரூ.10,000
அளித்தார் தியாகராய செட்டியார்.
இருந்தும், விழாக் கூட்டத்திற்குச்
சென்றபோது அவரை மேடையில் உட்கார
வைக்காமல் கீழே உட்காரச்
செய்தார்களாம். ஹைகோர்ட் ஜட்ஜ் முதல்
அர்ச்சக, பரிச்சாரக, தரகர் –
பார்ப்பனரெல்லாம் மேடையில்
அமர்ந்திருந்தனராம். இவரிடம் இவருடைய
அலுவலகத்தில் வேலைக்கு இருந்த சில
பார்ப்பனச் சிப்பந்திகள் கூட மேடைமேல்
வீற்றிருந்தனராம். ஆனால், இவரை மேடையில்
வீற்றிருக்க யாரும் அழைக்கவில்லையாம்.
இந்தப் பார்ப்பன சாதித் திமிரை சகிக்க
முடியாத சர்.பி.டி.தியாகராய
செட்டியார், அந்த
இடத்தை விட்டு விர்ரென்று எழுந்து காரிலேறி டாக்டர்
நாயர் பங்களாவுக்குச் செல்லச்
சொன்னாராம். இந்த
நிகழ்ச்சிகள்தான் பிராமணரல்லாத
கட்சியை ஆரம்பிக்க வேண்டும் என்ற
எண்ணத்தை உருவாக்கியதாம்.
இதைப்பற்றி ‘டாக்டர் நாயர், தியாகராயர்,
நான்’ என்ற தலைப்பில்
ஈ.வே.ராமசாமி நாயக்கர்
பின்வருமாறு எழுதுகிறார்:-
‘ …ஆரம்பகாலத்தில்
பார்ப்பனரல்லாதவர்களுக்கு விரோதமாக
தேசியப் போர்வையில்
பார்ப்பனர்களை ஆதரித்தவர்தான் அவர்
(நாயர்). நானும் ஆரம்பத்தில்
பார்ப்பனர்களுக்கு ஆதரவாயிருந்து பார்ப்பனரல்லாதார்
தேர்தலை எதிர்த்தவன்தான். பிறகுதான்
உண்மை உணர்ந்து நாங்கள்
பார்ப்பனரல்லாதாரோடு ஒன்றானோம்.
ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்களில் மிக
முக்கியமானவரான சர்.பி.டி.தியாகராய
செட்டியார் கூட ஆரம்பத்தில்
தேசியவாதியாக இருந்தவர்தான். 1914ல்
சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ்
மாநாட்டின்
காரியதரிசியாயிருந்து அரும்பெரும்
தொண்டாற்றியவர்தான் அவர்.
அவரும் இன உணர்ச்சி பெற்றார்.
ஆகவே நாங்கள் எல்லாம்
துவக்கத்திலேயே இராட்சதர்களாக
ஆக்கப்பட்டவர்கள் அல்லர்.
அடிமைகளாயிருந்து பிறகு அவர்களின்
கொடுமை தாங்காமல் இழிவு பற்றிய
உணர்ச்சி பெற்று விழிப்படைந்தவர்கள்தாம்
நாங்கள்.’1
(நீதிக்கட்சி 75வது ஆண்டு பவள விழா மலர்
1992)

ஈவேராவும் தனது சொந்தப்
பிரச்சினைகளின் காரணமாகவே காங்கிரஸ்
கட்சிக்கு எதிராக நீதிக்கட்சியை ஆதரித்தார்.
இது குறித்து “ஈ
வெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்”
என்ற எனது நூலில் விவரங்கள் உள்ளன.
ஆக இதிலிருந்து நாம் ஒரு விஷயத்தைத்
தெளிவாகப்
புரிந்து கொள்ளலாம்.
அதாவது நீதிக்கட்சியை ஆரம்பிக்கவும்,
ஆதரிக்கவும் சொந்தப்
பிரச்சினைகளே காரணமாக இருந்தன.
டி.எம்.நாயர் தேர்தலில் தோற்றுப் போனதாலும்,
தியாகராய செட்டியார் தம்மை மேடையில்
உட்கார வைக்கவில்லை என்பதாலும்
பிராமணர்கள் மேல் இவர்கள்
வெறுப்புக்கொண்டனர். இந்த
சொந்த பிரச்சினைகளால் எழுந்த
வெறுப்பால்தான் பிராமணரல்லாத
கட்சியை ஆரம்பிக்க எண்ணம்
கொண்டார்களே தவிர,
தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேற்றம் அடைய
வேண்டும் என்ற காரணத்திற்காக அல்ல
என்பதை நாம் தெளிவாகப்
புரிந்து கொள்ளலாம்.
நான் இப்படிச் சொல்வதற்கும்
ஒரு காரணம் இருக்கிறது. டி. எம். நாயர்
சென்னை மாநகராட்சிக்கு மும்முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அந்த மும்முறையும் அவர் தாழ்த்தப்
பட்டவர்களைப் பற்றி எண்ணியதுண்டா?
கவலைப்பட்டதுண்டா?
தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஏதாவது நன்மை செய்திருக்கிறாரா?
சேரியிலே புழுக்களாக அகப்பட்டுக்
கொண்டு தினமும்
இன்னல்களை அனுபவித்து வந்த தாழ்த்தப்பட்ட
மக்களைப் பற்றி மாநகராட்சியில்
பேசியதுண்டா?
இல்லை…இல்லை…இல்லை.
அதைப் போலவே தியாகராய செட்டியாரும்
நீதிக்கட்சியை ஆரம்பிப்பதற்கு முன்
தாழ்த்தப்பட்டவர்களின்
நலனுக்கு ஏதாவது செய்திருக்கிறாரா?
கெடுதிதான் செய்திருக்கிறார்.
1921ஆம் ஆண்டு சென்னை பெரம்பூர்
பக்கிங்காம் கர்னாடிக் மில்
தொழிலாளர் வேலை நிறுத்தத்தால்
ஏற்பட்ட போராட்டம் சாதிக் கலவரமாக
மாறியது.
இதைக் காரணமாக
வைத்து தியாகராயர் என்ன செய்தார்
தெரியுமா?
‘தாழ்த்தப்பட்டோர்களை நகருக்கு வெளியே குடியமர்த்த
வேண்டும்’
என்று அரசுக்கு ஆலோசனை வழங்கினார்.
அன்றைய தொழிலாளர் தலைவரான
எம்.சி.ராஜா இதைக் கடுமையாக விமர்சனம்
செய்தார். இந்த நேர்மையற்ற செயல்
‘ஏறிவந்த ஏணியை எட்டி உதைக்கும் நீதிக்கட்சியினர்’
என்று தலைவர் ஜெ.சிவசண்முகம்
பிள்ளையை எழுத வைத்தது.
அதேபோல 1921-22ல் தியாகராய
செட்டியார் தீண்டாமை ஒழிப்பைப் பற்றிய
விவாதத்தில் ஆதரவான கருத்து ஏதும்
கூறாமலே இருந்துவிட்டார்.
இப்படி தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதுவுமே செய்யாத,
அவர்களுக்கு எதிராக
இருந்தவர்களா தாழ்த்தப் பட்டவர்களின்
முன்னேற்றத்திற்காக
நீதிக்கட்சியை ஆரம்பித்தனர்?
கல்வியிலும் செல்வத்திலும் வளமாக
இருந்த நாயருக்கும் தியாகராய
செட்டியாருக்கும் ஒருவேளை கட்சியிலும் மேல்
சாதியாரிடத்தும் மதிப்பும் வாய்ப்பும்
கிடைத்து இருக்குமானால் இந்த ‘ இன உணர்வு
’ உண்டாகியிருக்குமா என்பதை நாம் சிந்திக்க
வேண்டியிருக்கிறது.
இவர்களுடைய சொந்த நலன்கள்
பாதிக்கப்பட்டதாலேயே பிராமணரல்லாத
கட்சியை ஆரம்பித்தார்கள் என்பதுதான்
உண்மை.
1916ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம்
நாள் நீதிக்கட்சி உருவானது.
அதே ஆண்டு டிசம்பர் மாதம் 20ம் நாள்
தியாகராயச் செட்டியார்
‘பிராமணரல்லாதார்
கொள்கை அறிக்கை’யை வெளியிட்டார்.
அந்த அறிக்கை, பிராமணரல்லாத
உயர்சாதி மக்களுக்கான – பிற்படுத்தப்பட்ட
மக்களுக்கான அறிக்கையாகத்தான்
வெளிவந்தது.
அந்த அறிக்கையின்
ஒரு பகுதியிலிருந்தே இதை உணர்ந்து கொள்ளலாம்.
‘‘…..(கல்வித்துறையில்) தாமதமாக
நுழைந்திருந்தாலும் பிராமணரல்லாத
சமுதாயங்கள் முன்னேறத் துவங்கிவிட்டன.
அவர்கள் இப்போது முன்னேற்றத்தின் பல
படிக்கட்டுகளில் இருக்கிறார்கள்.
செட்டியார், கோமுட்டி, முதலியார், நாயுடு,
நாயர் போன்ற சமுதாயத்தினர் வேகமாக
முன்னேறி வருகின்றனர். மிகவும் பின்தங்கியோர்கூட
முன்னேறியிருப்பவர்களைப் போல புதிய காலத்தின்
தகுதிகளைப் பெறுவதற்காக அக்கறையுடன்
பாடுபட்டு வருகிறார்கள். கல்வியில் முன்னேற
வேண்டும் என்கிற பொதுவான
உணர்வு எல்லோருக்கும் ஏற்பட்டுவிட்டது.
பிராமணர்களில் காணப்படுவதைவிட சில
பிராமணரல்லாத
சமுதாயத்தினரிடையே காணப்படும்
கல்வி வளர்ச்சி சீரானதாகவும், சமநிலையிலும்
(ஆண்-பெண் இருபாலரும் கல்வி கற்கும்
சூழ்நிலையிலும்) இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க
சூழ்நிலையாகும். எது காரணம்
பற்றியோ கல்வி இலாக்காவினர் பிராமணப்
பெண்களுக்கும், குறிப்பாக பிராமண
விதவைகளுக்கும் ஏதோ அவர்கள் பின்தங்கிய
வகுப்பைச் சேர்ந்தவர்கள் போலக்
கருதிக்கொண்டு கல்விச்
சலுகை அளித்து வருகின்றனர். இருந்தாலும்
பிராமணரல்லாதாரைச் சேர்ந்த நாயர்
பெண்களின் அளவுக்குப் பிராமணப்
பெண்கள் கல்வி கற்றுவிட்டதாக இல்லை.
பல்வேறு வழிகளிலும், பல்வேறு துறைகளிலும்
பிராமணரல்லாதார் அடக்கமாக அதேநேரம்
பயனுள்ள வகையில் இந்த மாகாணத்தின்
முன்னேற்றத்திற்காகப்
பணியாற்றி வருகின்றனர்.
அவர்களும் அவர்களுடைய சகோதரர்களும்
இதுவரையில் வேறுவழியின்றி பின்னால்
தள்ளப்பட்டுக் கிடந்தார்கள். பிராமண
ஜாதியினர் தந்திரமாகவும்,
பல்வேறு வழிகளிலும் அரசியல் அதிகாரத்தையும்,
உத்யோகச் செல்வாக்கையும் பயன்படுத்திய
காரணத்தால் அறிவுத்துறையில் தீவிரமான
போட்டி நிலவுகின்ற இந்த நாட்களில் பரீட்சைகளில்
வெற்றி பெறும்
திறமை ஒரு தனித்திறமை என்பதை நாங்கள்
மறுக்கவில்லை.
எங்களால் புரிந்துகொள்ள
முடியாதது என்னவெனில்,
மற்றவர்களைவிட ஆங்கிலம் கற்ற ஆடவர்
தொகை அதிகம்
கொண்டிருக்கிற ஒரு சிறு வகுப்பு, இதர
வகுப்புகளில் ஏதோ குறைந்த அளவாவது திறமை,
ஞானம், பண்பாடு கொடுக்காமல்
அவர்களை முற்றிலும் ஒதுக்கிவிட்டு, அரசாங்க
உத்தியோகங்களில் பெரிதும், சிறியதும்,
உயர்ந்ததும், தாழ்ந்ததுமான அனைத்தையும்
உறிஞ்சிக்கொள்ள
அனுமதிக்கப்படுவதுதான்!” ….
(திராவிட இயக்க வரலாறு,
தொகுதி-1,
முரசொலிமாறன்)

செட்டியார், கோமுட்டி, முதலியார், நாயுடு,
நாயர் போன்ற தங்கள் சமுதாயத்தினர்
வேகமாக முன்னேறி வருகின்றனரே – நாயர்
பெண்கள் முன்னேறி வருகின்றனரே,
அவர்களை முற்றிலும் ஒதுக்கிவிடுகின்றனரே இந்த
பிராமணர்கள்! என்ற ஆதங்கம்தான் இதில்
தொனிக்கிறது என்பதைக்
கூர்ந்து படித்தால் புரிந்துகொள்ள
முடியும்.
தாழ்த்தப்பட்டவர்கள்
புறக்கணிக்கப்படுவது பற்றிய கவலை இதில்
இல்லை. ஏனென்றால்
தாழ்த்தப்பட்டவர்கள் தாழ்த்தப்
பட்டவர்கள்தானே!
ஆனால், என்ன செய்தால்
தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேறுவார்கள்
என்பதைத் தெளிவாக அறிந்து,
ஆக்கபூர்வமாகச் செயல்படுத்திய
பெரியோர் பலர் உண்டு. உதாரணமாக,

ராவ் சாகேப் எல்.சி. குருசாமி (1885- 1966)
1920 முதல் பத்து வருடங்களுக்கு அவர்
சென்னைச் சட்டமன்றத்தில்
எம்.எல்.ஏ.வாகப் பதவியேற்றிருந்தார்.
இருபத்திரண்டு வருட காலம் அவர் கௌரவ
நீதிபதியாகப் பதவியை அலங்கரித்தார்.
நாகரிகமான, பண்பாடு நிறைந்த
வாழ்க்கையின்
முதல்படியானது கல்விதான் என்னும்
கோட்பாட்டை அவர்
கொண்டிருந்தார். அதனால்
1921ல்
இரண்டு இரவுப்பள்ளிகளை நிறுவினார்.
அதற்காக அவர் இரண்டாயிரம்
ரூபாய் உதவிப்பணமும் அக்கால
அரசாங்கத்திடமிருந்து பெற்றார்.
புதுப்பேட்டை, கொய்யாத்தோப்பு,
ராயபுரம், மைலாப்பூர்,
பெரியமேடு ஆகிய பகுதிகளிலும் அவர்
பள்ளிகளை நிறுவினார்.
செங்கல்பட்டு,
பொன்னேரி முதலிய முக்கியப்
பகுதிகளில் பகல் நேரப் பள்ளிகளையும்
ஆரம்பித்தார். கல்வி பயில மக்கள்
தவறுவார்களானால்
அது மக்களுக்கும், அரசாங்கத்துக்கும்
தீங்கு விளைவிக்கும் என்று அவர்
எச்சரித்திருக்கின்றார்.
1921ல் பல நூறு குடும்பங்கள் தாங்கள்
வாழும் நிலத்தை உரிமையாகப் பெற
அவர் வழி கண்டார். புளியந்தோப்பு,
வேப்பேரி, மைலாப்பூர், பெரம்பூர் ஆகிய
பகுதிகளில் மக்களைக் குடியேற்ற அவர்
நிலங்களைப் பெற்றார்.
ஆதிக்குடி மக்கள் கல்வி,
பொருளாதார
வகை முதலியவற்றில்
வலிமை பெற்றால்,
பிறகு தீண்டாமையும் சாதி வேற்றுமையும்
தாமாகவே ஒழிந்துவிடும் என்ற
கருத்தையே அவர்
மேற்கொண்டிருந்தார்.
1926ல் கோடம்பாக்கம்
கைத்தொழில் பள்ளி நலச்
சங்கத்தில் இணைந்திருந்தார். நகரக்
கூட்டுறவு வங்கியின் இயக்குநர்களில்
ஒருவராகவும் இருந்தார். மேலும்,
சென்னை நகரசபைக் கவுன்சிலில்
உறுப்பினராகத்
தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1927ல் அவர் ‘ராவ் சாகேப்’ என்ற
பட்டம் பெற்றார்.
செங்கல்பட்டு, திருவள்ளூர் முதலிய
பகுதிகளில் அவர் கல்வி நிறுவனங்களில்
தொண்டாற்றினார்.
1929ல் அவர் பல்கலைக்கழக செனட்
உறுப்பினராகவும் இருந்தார்.
1932ல் டில்லியில் நிகழ்ந்த
வாக்காளர்கள் கூட்டத்தில் அவர்
தமது மதிப்பு வாய்ந்த
யோசனைகளை வழங்கினார்.
1937ல் நிகழ்ந்த ஆலயங்களில்
துணிந்து பிரவேசித்தல் என்ற
போராட்டத்துக்காக அவர் பலரைத்
திருவாங்கூருக்கு அழைத்துச்
சென்றார். பல மாணவர்
விடுதிகளை நிறுவினார்.

தளபதி எம். கிருஷ்ணசாமி, (1917 – 1973)
வறுமையின் பிடியிலே சிக்கினாலும்
இலட்சியத்தின்
மதிப்பினை குறைத்துவிடாமல்
வாழ்ந்தவர்களிலே தலைவர் எம்.
கிருஷ்ணசாமி அவர்கள்
சிறப்பானவராவார்.
ஆசிரியராகவும் பின்னாளில்
வணிகத்திலும் தம்
வாழ்வை துவக்கினார்.
தமிழ்ப் பழங்குடி மக்களின்
பல்கலைக்கழகமாக திகழ்ந்த அவர்
ஏற்கனவே 1920ல் தோற்றுவிக்கப்பட்ட
பழங்குடி மக்கள் சம்மேளனத்தின்
கொள்கைகளை ஏற்று 1940 முதல்
பணியாற்ற முன்வந்தார். இடையில்
புத்த பிரச்சாரத்தில் ஈடுபடும்
வாய்ப்புகள்
அவரை பல்வேறு பகுதி மக்களிடையே ஈடுபாடு கொள்ளச்
செய்தது.
தலைவர் என்.சிவராஜ் போன்ற
தலைவர்களுடன் ஏற்பட்ட சந்திப்பின்
விளைவாக மாமேதை அம்பேத்கர் 1942லும்
1956லும் ஷெட்யூல் வகுப்பினர்
சம்மேளனம், இந்தியக்
குடியரசுக்கட்சி போன்ற
அமைப்புக்களை ஆரம்பித்தார். இந்த
அமைப்புகளின் தலைவராக சிறப்பாக
தொண்டாற்றினார் இவர்.
பழங்குடி சமுதாய மக்களின்
வாழ்க்கை முன்னேற்றத்திற்காக
குலக்கல்வி திட்ட எதிர்ப்பு, சாதி ஒழிப்புப்
போராட்டம், விலைவாசி போராட்டம்
போன்றவைகளில் பெரும்
பங்கேற்று சிறை சென்றார். பழங்குடிச்
சமுதாயம் விழிப்படைய தனது சமத்துவ
சங்கு என்ற பத்திரிகையின் மூலமாக
சங்கநாதம் செய்தார். வளர்ந்த
கட்சிகள் வலிய வந்து அழைத்தும் பதவிக்கோ,
பணத்திற்கோ தமது இலட்சியத்தை விட்டு கொடுக்காமல்
மறுத்து தேர்தல்களில் எதிர்த்து நின்றார்.

ஏழை பங்காளன் தொண்டு வீ.
வீராசாமி, எம்.பி (1919-1995)
கல்லூரியில் படிக்கும்போது தான்
தங்கியிருந்த திருச்சி ஹரிசன சேவாசங்க
தாழ்த்தப்பட்ட மாணவர் விடுதியில்
மாணவர்களுக்கு மட்டும்
கஞ்சி ஊற்றப்படுவதைக்
கண்டு வருந்தினார். இந்த அவலத்தைத்
தாழ்த்தப்பட்ட மக்கள் தலைவர்
தந்தை சிவராஜின் கவனத்துக்கும்
சட்டமன்ற உறுப்பினர் திரு.மருதையனின்
கவனத்துக்கும்
கொண்டு சென்று தீர்வு கண்டார்.
இங்கனம் சமூக நலனுக்காக
உழைத்தாலும், கல்வியிலும் கவனமாய்
இருந்து 1941ல் பி.ஏ.பட்டம்
பெற்றார்.
1945ல் திருச்சி தக்கர்பாபா ஹரிஜன
மாணவர்கள்
இல்லத்திலிருந்து தாழ்த்தப்பட்ட
கல்லூரி மாணவர்களை அற்பக்
காரணங்களுக்காக இல்ல
நிர்வாகிகள் வெளியேற்றினர்.
மாணவர்களின் பரிதாப நிலையைக்
கண்டு வீராசாமி 31-1-1945
அன்று இரவோடு இரவாக தம்
இல்லத்தை டாக்டர் அம்பேத்கர் மாணவர்
இல்லமாக மாற்றினார்.
தந்தை சிவராஜ், ஈவேரா போன்றவர்களிடம்
இருந்த நெருக்கத்தால் 1950ல்
தாம் பணிபுரிந்த
திருச்சி வானொலி நிலையத்திலிருந்து விலகி முழுநேரப்
பொதுநலத்
தொண்டரானார்.
1950ல் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக
‘தொண்டு’ என்ற
பத்திரிகையை (தமிழிலும், ஆங்கிலத்திலும்)
தொடங்கி 20 வருடங்கள்
தொய்வில்லாமல்
நடத்தினார். 1952 நாடாளுமன்ற
தேர்தலில் மாயவரம் (மயிலாடுதுறை)
தாழ்த்தப்பட்டோர் தொகுதியில்
தனிச்சின்னத்தில் சுயேட்சையாக
போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ஏழை மாணவர்களின் நன்மைக்காக பல
நூல்நிலையங்களோடு கூடிய மாணவர்
இல்லங்களை உருவாக்கினார்.
1974ல் சமூக புரட்சி என்ற இதழையும் (4
வருடங்கள்) 1980ல் (பௌத்த மார்க்கம்)
என்ற இதழையும் (2 வருடங்கள்) நடத்திய
பெருமை வீராசாமிக்கு உண்டு.
பறை அடிப்பதையும் , இடுகாட்டிலும்
சுடுகாட்டிலும் வேலை செய்வதையும்
ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் நிறுத்த
வேண்டும் என்று கடுமையாக பிரச்சாரம்
செய்தார். 1980ல் தம்
குடும்பத்துடன் துறையூரில் பௌத்தத்தைத்
தழுவினார்.

ராவ் பகதூர் ஜெகந்நாதன் (1894 –
1954)
தனது காலத்திலே அரசியல் சமுதாய
துறைகளில் உழைத்துக்கொண்டிருந்த
தலைவர்களுடன்
இணைந்து தொண்டாற்றி விரைந்து முன்னேறினார்.
இரவுப் பள்ளிகளையும் மாணவர்
விடுதிகளைத் துவக்கி வைப்பதிலே இவர்
அதிகம் அக்கறைக் காட்டினார். 1920ல்
சட்டமன்ற உறுப்பினராக
நியமிக்கப்பட்டார்.
1929லிருந்து 1938
வரை மாநகராட்சி உறுப்பினராக
இருந்து திறம்பட
தொண்டாற்றினார்.
சிறிது காலம் கௌரவ நீதிபதியாகவும்
கூட்டுறவு சங்கங்களின் தலைவராகவும்
இருந்திருக்கிறார். சென்னை மாநில
டிப்ரஸ்டு வகுப்பினர் சம்மேளனத்தின்
துணைத் தலைவராகவும், மாநில
கொள்கை பரப்பும்
தலைவராகவும், மற்றும் எண்ணற்ற
அமைப்புகளிலும்
பொறுப்பேற்று உழைத்தார்.
அயல்நாட்டிலிருந்து இந்திய தேச
நிலைமையையும், நிதி, சமுதாயம் போன்ற
நிலைமைகளையும் ஆராய வந்த குழுக்களிடம்
இவரது இன்றியமையாத அரிய
கருத்துக்களை கேட்டறிய அரசாங்கம்
வேண்டிக் கொண்டது. எனவே,
இவர் ராயல் கமிஷன், சைமன் கமிஷன்,
லோத்தியன் கமிட்டி, ஹாமென்ட்
கமிட்டி போன்ற தலைசிறந்த அரசியல்
பொருளாதார நிபுணர்கள்
அடங்கிய குழுவினரிடம்
தனது ஆலோசனைகளை வழங்கினார்.
1933ல் வரலாற்று முக்கியத்துவம்
பெற்ற பூனா ஒப்பந்தத்தில்
பழங்குடி மக்களின் சார்பில்
கையெழுத்திட்ட தலைவர்களில் இவரும்
ஒருவராவார்.
சமுதாய நன்மைகளுக்காக
மக்களை விழிப்பூட்ட பல மாநாடுகளில்
இவர்
பங்கேற்று நிலைமைகளை மக்களுக்கு அறிவுறுத்தியும்,
அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்தும்
மக்கள் பயனடைய வகை செய்தார்.
ஆந்திர மாநிலத்தில்
நிலப்போராட்டங்களை முதுபெரும்
தலைவர் ஆர். சீனிவாசன்
அவர்களுடனிருந்து நடத்தி ஏழை மக்கள்
நிலங்களைப்
பெறுவதற்கு பேருதவியாக
இருந்தார்.

அன்னை மீனாம்பாள் சிவராஜ் (1904 –
1992)
வி.ஜி. வாசுதேவப்பிள்ளை –
மீனாட்சி தம்பதியருக்கு மகளாய்
26-12-1904ல் பிறந்தார்
அன்னை மீனாம்பாள். அன்னையின்
பிறப்பிலேயே பெருமையிருக்கிறது என்றால்
மிகையாகாது. அவரது முப்பாட்டனார்
ஒரு வணிகர். தாய்வழிப்பாட்டனார்
பெ.மு.மதுரைபிள்ளை ஒரு பெரும்
வணிகர்; வள்ளலுங்கூட. இரங்கூன்
மாநகரில் கப்பல் வணிகத்தில்
சிறந்து வாழ்ந்தவர். கப்பல்
வைத்திருக்குமளவுக்கு செல்வம்
படைத்தவர்.
அன்னையவர்களின் தந்தையார்
திரு.வி.ஜி.வாசுதேவப்பிள்ளை அவர்கள்
ஆதிதிராவிட தலைவர்களில்
சிறப்பானவர். பழங்குடி மரபில்
சென்னை மாநிலத்திலேயே முதன்முதலில்
மாநகராட்சி மன்ற உறுப்பினராகத்
தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
நெடுங்காலம்
சென்னை மாநில
சட்டமன்றத்தை அலங்கரித்தவர்.
அன்னை மீனாம்பாள் அவர்களுடைய
பொதுப்பணி 1928ல் சைமன்
குழுவினரை ஆதரித்த முதல் மேடைப் பேச்சில்
துவங்கியது. 1930லிருந்து அண்ணல்
அம்பேத்கரின்
பணிகளை பொதுமக்களிடம்
தமிழில் எடுத்துக் கூறியவர். ‘என்
அன்பு சகோதரி’ என்று அண்ணல்
அம்பேத்கரால் அழைக்கப்பட்டவர்.
கிட்டதட்ட 1970
வரை அவரது பொதுப்பணி தீவிரமாக
இருந்தது. அன்னையின் அயராத
உழைப்பிற்கும் உண்மையான
தொண்டிற்கும் பல பதவிகள்
அவரைத் தேடிவந்தன. அவற்றில் சில :
துணைமேயர், சென்னை மாநகராட்சி,
ஆனரரி பிரசிடென்ட் மாஜிஸ்ட்ரேட்,
உறுப்பினர் மெட்ராஸ்
பிரசிடென்ட் அட்வைசரி போர்டு,
உறுப்பினர் போஸ்ட்வார் ரீகன்ஸ்ட்ரக்ஷன்
கமிட்டி,
உறுப்பினர் மெட்ராஸ்
யூனியவர்சிட்டி (செனட்)
அன்னையார் ஆதிதிராவிடர்
தலைவர்களுடன்
இணைந்து பணியாற்றியவர்.
அவர்களால் விரும்பப்பட்டு பெரிதும்
பாராட்டப்பட்டவர். இருப்பினும் தன்
தனித்தன்மையை நிலைநாட்டுவதில் சற்றும்
தயங்காதவர். பலநூறு கூட்டங்களுக்கும்
மாநாடுகளுக்கும் தலைமை தாங்கியும்
கலந்துகொண்டும்
அன்னையவர்கள் சிறப்பித்திருக்கிறார்.

தலைவி ஜோதிவேங்கிடசெல்லம் (1917 –
1992)
ஜோதி அம்மாள் என்று அன்புடன்
அழைக்கப்பட்ட இவர் 27-10-1917ல்
பர்மாவிலுள்ள மேம்யோ என்ற ஊரில்
குப்புராம் தம்பதியிருக்கு பிறந்தவர்.
ரங்கூனில் சீனியர் கேம்பிரிட்ஜ்
வரை படித்தவர். 1934
சென்னைக்கு வந்ததும் 1935ல்
திரு பி.வி.எஸ்.வேங்கிட செல்லம்
அவர்களை மணந்தார். 1961ல் கணவர்
கார் விபத்தில் காலமான
பிறகு தொழிலகத்திற்குப்
பொறுப்பேற்றார்.
இந்திய வணிகர்களில் தமிழகத்தைச் சேர்ந்த
உலகப் புகழ் பெற்ற வேங்கிட
செல்லம் கம்பெனியார்
குறிப்பிடத்தக்கவர். இந்த நிறுவனத்தின்
ஊறுகாய் வகைகள் 1900ல் உலகம்
முழுவதும் புகழ்பெற்றிருந்தது.
லண்டனில் இன்றைய
எலிசபெத்ராணியாரின்
பாட்டனார் எட்வர்ட் காலத்திலும்,
தந்தை ஜார்ஜ் மன்னர் காலத்திலும்
அண்மை காலம் வரையிலும் வின்சர்
அரண்மனையில் பி.வி.நிறுவனத்தின்
ஊறுகாய் வகைகளைத்தான்
விரும்பி உண்டு வந்தார்கள்.
1938லிருந்து இவர்
பொதுப்பணியிலும் சமூகப்
பணியிலும்
ஈடுபாடு கொண்டார்கள்.
1940ல் கௌரவ மாஜிஸ்ட்ரேட்டாகவும்
1950ல் மாநில சமூக நலப் போர்டின்
துணைத்தலைவராகவும்,
சென்னை பல்கலைக்கழகத்தின்
(செனட்) உறுப்பினராகவும்
பணியாற்றினார். 1952ல் அவருடைய
கணவர் சென்னை செரீப்பாக
இருந்தபோது திரு.ராஜகோபாலாச்சாரியாரை சந்திக்கும்
வாய்ப்பு ஏற்பட்டது. ஜோதியம்மாளுடைய
ஆற்றலையும், செல்வாக்கையும்
கண்ட ராஜாஜி அவர்கள்
தமது அமைச்சரவையில்
பொறுப்பேற்கும்படி கேட்டுக்கொண்டார்.
அன்றுவரை சமூக சேவகியாக இருந்த அவர்
அமைச்சர் பொறுப்பைத் துணிவுடன்
ஏற்றுக்கொண்டது அவருடைய
திறமைக்கு நல்ல சான்றாகும்.
பிறகு 1962ல் திரு.காமராசரின்
அமைச்சரவையிலும், திரு. பக்தவத்சலம்
அமைச்சரவையிலும்
தொடர்ந்து அமைச்சராக
இருந்தார்.
1976வரை கலைக்கப்பட்ட சட்டசபையின்
எதிர்க்கட்சி துணைத்தலைவராகவும்
இருந்தார். 1974ல் பத்மஸ்ரீ
விருது பெற்றார். 1978ல் கேரள
ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
அவர் புரிந்த விளம்பரமில்லாத
சாதனைகள் பல. அவற்றில் சில:
கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி,
பாளையங்கோட்டை பி.ஜ.எம்.கல்லூரி,
திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி,
சென்னை அண்ணாநகரில் உள்ள
அண்ணா சித்த வைத்தியக்
கல்லூரி ஆகியவை அவர் காலத்தில் அவர்
முயற்சியால்
தொடங்கப்பட்டவை.
அம்மையாருடைய மூதாதையர்
ஏற்கனவே நூறு ஆண்டுகளுக்கு முன்பு வேங்கிடாசல
ஏழையர்
பள்ளி ஒன்றை நிறுவி இருந்தார்கள்.
அது இன்றும்
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில்
நடைபெற்று வருகிறது.
இப்பொழுது சொல்லுங்கள் !
‘‘அந்த கால அளவில்
தாழ்த்தப்பட்டவர்களுக்காக போராடத்
தாழ்த்தப்பட்ட இனத் தலைவர்கள் பலராக
இல்லை. தாழ்த்தப்பட்டவருள் அரசியல்
அறிவு வாய்க்கப் பெற்றிருந்த ஓரிருவர்
நீதிக்கட்சியில் சேர்ந்திருந்தனர். தாழ்த்தப்பட்ட
இனத் தலைவர்கள்
நீதிக்கட்சி கொடியின் கீழ்
அணிவகுத்து நின்றனர்.
நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களின்
உரிமைக்காக போராடிற்று….’’
என்று எழுதிய திராவிட இயக்க எழுத்தாளர்
ராசதுரை உண்மையைத்தான் எழுதினாரா?
தாங்கள் சார்ந்திருக்கிற இயக்கத்தைப்
பெருமைபட எழுதலாம். அதில் தவறில்லை.
ஆனால் ஒரு சமுதாயத்துக்காக உழைத்த
பல தலைவர்களின்
வரலாற்றையே இருட்டடிப்பு செய்து, தான்
சார்ந்திருக்கிற இயக்கத்தால்தான்
உரிமை போராடி பெறப்பட்டது என்று சொல்வது கடைந்தெடுத்த
பொய் அல்லவா?
ஒரு சமுதாயத்தையே கீழ்த்தரமாக
எண்ணி எழுதுகின்ற எழுத்தல்லவா அவர்
எழுதியது?
அதைப் போலவே ‘பார்ப்பனரல்லாதாரில்
உயர்ந்த சாதியராகிய’ என்றுதான்
இவரின் முன்னோடிகளான நீதிக்கட்சியினரும்
எழுதினர்.
இப்படி எழுத என்ன காரணம்?
இவர்களுக்குள் இருப்பது ஜாதியம்
மட்டுமே என்பதுதான் காரணம்.